எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

16. பவானியைப் பார்த்தேன்

ஜுலை 10, 2006

முந்தா நாள் சுருட்டப்பள்ளி போய்விட்டுத் திரும்பும்வழியில் எங்கள் வண்டியை ஓட்டி வந்த டிரைவர் பக்கத்தில் ரெட் ஹில்ஸ் வழியாகப் போனால் பெரிய பாளையம் போய்ப் பவானி அம்மனைப் பார்க்கலாம் என்று கேட்டார். வீட்டில் போய் ஒண்ணும் வெட்டி முறிக்கப் போவது இல்லை. அன்று பெண்ணோட chatting-ம் இருக்காது. போனால் இவர் வழக்கம்போல் ரிமோட்டும் கையுமாகத் தான் உட்காருவார். ஆகவே போகலாம் என்று சொன்னோம். சுருட்டப்பள்ளியில் இருந்து சற்று வடகிழக்கே பிரியும் பாதையில் சில கிலோமீட்டர் போனதும் பெரிய பாளையம் கோவில் வருகிறது. அநேகமாக இந்தக் கோவிலுக்கு இதுவரை போகாத சென்னை வாசிகள் கிடையாது என்று டிரைவர் சொன்னார். சரி, நாமும் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவோம் என்று இருவரும் முடிவு செய்து போனோம்.

சாயங்காலம் தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. ஆகவே தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் கூட்டம் ஜாஸ்தி இருந்த காரணத்தால் நாங்கள் 5ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதற்கு மேல் இல்லை. 5ரூக்கும் கூட்டம் தான். சற்று நேரத்திற்கு எல்லாம் திரை விலகித் தீப ஆராதனை நடந்தது. நாங்கள் நின்று இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. சற்றுக் கூட்டம் குறைந்ததும் நாங்கள் பார்க்க வழி கிடைத்தது. பூசாரிகள் விரட்டுகிறார்கள். அதற்குள் அம்மனைப் பார்க்க வேண்டும். அம்மன் மார்பளவு தான் இருக்கிறாள். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளும் மார்பளவுதான். எனக்குத் தெரிந்து ரேணுகா தேவிதான் மார்பளவு இருப்பாள். பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகா தேவிக் காயங்களுடன் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று புரியவில்லை.

மொத்தத்தில் ரேணுகா தேவி மாதிரி இருக்கிறாள், பவானி அம்மனும். அங்கு தரிசனம் முடிந்ததும் டிரைவர் அங்கே பக்கத்தில் இன்னொரு சிவன் கோவில் இருப்பதாகவும் அதன் கோபுரம் லிங்க உருவில் இருக்கும் என்றும் கோவில் மிக அழகாக இருக்கும் என்றும் கூறினார். உடனே அங்கே போகலாம் என்று சொன்னோம். பெரிய பாளையத்தில் இருந்து 10 அல்லது 15 கி.மீ. தூரத்தில் தாமரைப்பாக்கம் என்னும் சிறு ஊர் இருக்கிறது. அங்கே போய் ஒரு வாசலில் நிறுத்தினார் வண்டியை. வேண்டுமானால் உள்ளே கூட வரலாம் என்றார். வேண்டாம் என்று சொல்லி விட்டு நாங்கள் இறங்கினோம். பார்த்தால் ஏதோ ஆசிரமம் மாதிரி இருந்தது. பாதை கொஞ்சம் கரடு முரடு தான்.வழி நெடுக ஏதோ சின்னச் சின்ன போஸ்டர்கள் ஏதோ எழுதப்பட்டிருந்தன. என்னவென்று நெருங்கிப் பார்த்தால் ஸ்வாமி சின்மயானந்தாவின் பொன்மொழிகள். அப்போதான் புரிந்தது ஸ்வாமி சின்மயானந்தாவின் ஆசிரமம் இங்கே எங்கேயோ இருப்பதாகக் கேள்விப்பட்டது. பொன்மொழிகள் எல்லாம் மிகவும் கருத்துச் செறிந்தவையாக இருந்தன. ஸ்வாமிகளின் கருத்துக்கு அபிப்பிராயம் சொல்ல நாம் யார்? இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த 2 வாசகங்கள்.

"YOUTH ARE NOT USELESS
THEY ARE USED LESS"

"வெளியே விழுந்தால் அது வீழ்ச்சி,
உனக்குள் விழுந்தால் அது எழுச்சி."

இவை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தன. கொஞ்ச தூரம் போனதும் ஒரு இடத்தில் வரிசை நின்று கொண்டிருந்தது. தரிசனம் செய்யவா என்று கேட்டதற்கு "இல்லை, பிரசாதம் தருகிறார்கள். தரிசனம் இலவசம். மேலே போய்ப் பார்க்கலாம்." என்று சொன்னார்கள். கீழே ஒரு பெரிய அறை இருந்தது. அதற்குள் போய்ப் பார்த்தால் அது "தியானக் கூடம்". ஒரு பெண் தியானம் செய்து கொண்டிருந்தாள், அவள் அருகில் போகும்போது எனக்குள் மெல்லிய அதிர்வுகளை உணர்ந்தேன். அந்தப் பெண் தியானத்தில் மூழ்கி விட்டாள் என்று புரிந்தது. கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தோம். ஆதிசிவனின் வெவ்வேறு ரூபங்கள் படங்களாக வரையப்பட்டுத் தொங்கின. சின்மயாநந்த ஸ்வாமிகளின் படம் நடுநாயகமாக இருந்தது. பின் அங்கிருந்து படிக்கட்டுகளின் வழியாக மேலே போனோம். முதல் மாடியில் அருமை நண்பர் விநாயகர் சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்தார். அவரைத் தரிசனம் செய்து கொண்டுப் பின் படி ஏறும் போதே ஸஹஸ்ர லிங்க வடிவத்தில் ஒரு பெரிய கோபுரம் தெரிந்தது. அதனுள் ஒரு வாயில். உள்ளே நுழைந்தால் நேரே தரிசனம். ஆனால் இயற்கையான ஒளியில். சற்றும் செயற்கையான ஒளி இல்லை. குளிரொளி தரும் சில விளக்குகள் கீழே உட்கார்ந்திருந்த பக்தர்களுக்கு மட்டும் போதுமான வெளிச்சம் தந்தது. சன்னதியில் வெறும் நெய்த் தீபங்களின் ஒளிதான். மேலே பாதரச லிங்கம்.(திருமுலை வாயிலிலும் உள்ளது). கீழே லிங்கம். பிரதோஷம் ஆகையால் சர்வ அலங்காரத்துடன் காட்சி கொடுத்தார். நேரே எதிரே நந்திஎம்பெருமான்,. அவருக்கும் அபிஷேஹ ஆராதனைகள் நடந்து இருக்கிறது. நாங்கள் போன சமயம் அர்ச்சனையோ சஹஸ்ரநாமமோ முடிந்து தீப ஆராதனை நடந்தது. மிகவும் நல்ல திவ்ய தரிசனம். பிரசாதம் பெற்றுக் கொண்டு கீழே வந்தோம். ஆசிரம வாசிகள் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அரிசி, வெல்லம் சேர்த்தும், பாலும் பிரசாதம் கொடுக்கிறார்கள். இன்னொரு இடத்தில் கேசரியும், பஞ்சாமிர்தமும் கொடுக்கிறார்கள். நாங்கள் போன சமயம் தீர்ந்து விட்டது. பஞ்சாமிர்தம் மட்டும் கிடைத்தது. தண்ணீர் சுவையாக இருக்கிறது. மிகவும் அமைதியான சூழலில் ஆசிரமம் நன்கு பராமரிக்கப் படுகிறது.

****************

சுருட்டப்பள்ளியிலும் சரி, அக்கம்பக்கத்து ஊர்களிலும் சரி, டீ, காஃபி குடிப்பவர்களுக்கு நல்ல ஓட்டல் கிடையாது. டீக்கடை ஒன்று சுருட்டப்பள்ளிக் கோவில் வளாகத்தில் இருக்கிறது. கழிப்பறை வசதியும் பெண்களுக்கு மட்டும்தான். நிர்வாகம் கவனிக்க வேண்டும். சாப்பாடு எல்லாம் கையில் கொண்டு போக வேண்டும்.இல்லாவிட்டால் அந்தப்பக்கம் புத்தூரிலும், இந்தப்பக்கம் திருவள்ளூரிலும் தான் ஹோட்டல். வெளி ஊரில் இருந்து வந்தால் கஷ்டம்தான்.

No comments: