எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

19. நான் செய்த தவம்

ஆகஸ்ட் 09, 2006

உண்மையிலேயே நான் ரொம்பத் தவம் செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் என்னோட இந்த உடல் நிலையில் இத்தனை கோவில்களுக்குச் சென்று வரமுடியாது. அதற்கு உரிய மனோதைரியத்தையும் எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான். இறைவனுக்கு நன்றி என்று சொல்வதை விட அவனையும், அவன் அருளையும் எந்நாளும் நான் மறவாமல் இருத்தல் வேண்டும். எல்லாம் அவன் செயலே!

இம்முறைத் திட்டம் இட்டது ஒன்று. நடுவில் பங்களூர் பயணம் குறிக்கிடவே சற்று மாறுதல் செய்ய வேண்டி வந்தது. ஆகவே மதுரை போக முடியவில்லை. நிறையக் கோயில்கள் சென்று வந்தாலும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் உள்ள முக்கியமான சில கோவில்களைப் பற்றி எழுத எண்ணம். எல்லாம் எல்லாப் புத்தகங்களிலும் வருகிறது. என்றாலும் நான் பெற்ற இன்பம் எல்லாரும் பெற வேண்டி எழுதுகிறேன். முதலில் என் அருமை நண்பர், என் எல்லாக் காரியங்களிலும் கை கொடுப்பவர், விக்னங்களைத் தடுத்து ஆட்கொள்பவர், ஒரு சிறு அருகம்புல்லிற்கே மனம் மகிழ்பவர் ஆன அந்த ஆனைமுகத்தோனுக்கு வணக்கம் சொல்லி அவன் திருக்கோயிலைப் பற்றி எழுதுவதுடன் ஆரம்பிக்கிறேன். இது போனது என்னமோ அப்புறம்தான். ஆனால் முதலில் ஆனைமுகத்தோன் புகழ்தான் வர வேண்டும் என்பதால் அவன் தாள் பணிந்து ஆரம்பிக்கிறேன்.

**********************
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு-துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற்சார்வர் தமக்கு.
**********************

திருவலங்சுழிகாவிரி அன்னை வலமாகச் சுழித்துக் கொண்டு போனதால் இந்த க்ஷேத்திரம் "திருவலஞ்சுழி" எனப் பெயர் பெற்றது. பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க தேவர்களும், அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கட்டிக் கடையும் வேளையில் அமுதம் திரண்டு வராமல் போகவே ஏதோ தவறு நடந்திருக்கிறது எனப் புரிந்து கொண்ட தேவேந்திரன், என்ன காரணம் என மும்மூர்த்திகளைக் கேட்க அவர்கள் "விநாயகரை முறைப்படிவழிபட்டுப் பின் ஆரம்பிக்கும்படிச் சொல்ல அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் கடல்நுரையாலேயே விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபடுகிறான். விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைகிறது. அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என அங்கேப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்றும் தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். கடல் நுரையால் செய்யப்பட்ட இந்தப் பிள்ளையார் "ஸ்வேத விநாயகர்" என்றும் "வெள்ளைப் பிள்ளையார்" என்றும் அன்புடன் அழைக்கப் படுகிறார். இவருக்கு அபிஷேஹம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாத்தப் படுகிறது. இவரை வழிபட்டுவிட்டுத் தான் இவரின் தம்பியான "ஸ்வாமிநாதனை" வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதைத் தவிர இந்தக் கோயில் இன்னும் பல சிறப்புகளைக் கொண்டது. வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் (பிலத்துவாரம்) ஏற்படவே காவிரி அதனுள் சென்று மறைகிறாள். சோழன் செய்வது அறியாது தவிக்க அசரீரி கூறுகிறது. "தன்னலம் கருதாது அரசன் ஒருவனோ அல்லது மாமுனிவர் ஒருவரோ அந்தப் பாதாளத்தில் தங்களைப் பலியிட்டுக் கொண்டால் பள்ளம் மூடிக் கொண்டு காவிரி வெளிப்படுவாள்" எனக்கூறுகிறது. இதைக் கேட்ட ஹேரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். ஹேரண்ட முனிவரின் சிலை கோவிலில் இருக்கிறது. மஹா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் வெளிவந்து வழிபட்டதாக ஐதீகம். அன்னை பராசக்தி சடைமுடி நாதனையே மணம் புரிவேன் என்று தவம் இருந்த காரணத்தால் "சக்திவனம்" என்ற பெயரும் உண்டு. ஸ்வாமிமலை கோயிலுக்கு நுழைவு வாயில். கோயில் ரொம்பப் பெரிது. இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியவர்களால் பாடல் பெற்ற தலம். கோவில் ரொம்பப் பெரிது. ஆனால் இன்று திருப்பணி வேலைகள் ஆரம்பித்து நடுவில் நின்று விட்டது போல் தெரிகிறது. ஸ்வாமிநாதன் தன் அண்ணனின் வீடு கவனிப்பாரின்றி இருப்பதைக் காணவில்லையா தெரியவில்லை. இத்தனை பெரிய கோவிலைப் பராமரிக்க ஆட்களும் குறைவு. சன்னதிகளில் தனியாகப் போய்த் தரிசித்து விட்டு வரவேண்டி உள்ளது. பக்கத்தில் ஸ்வாமிமலை அத்தனை கோலாகலத்துடன் இருக்க அதன் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்தக் கோயில் இப்படி இருப்பது வருத்தமாக உள்ளது. கணபதி எளிமையானவர் என்பதால் இது போதும் என்று இருக்கிறார் போலும். கோவிலுக்கு மன்னர்கள் அளித்த மானியங்களைப் பற்றிய கல்வெட்டுக்களும் இருக்கின்றன. அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் கும்பாபிஷேஹம் நடைபெறும் என நம்புவோம்.

No comments: