எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

21. ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்

ஆகஸ்ட் 11, 2006

நாங்கள் முதலில் போனது என்னமோ பங்களூர் தான். அதுக்கு அப்புறம் மைசூர். அங்கிருந்து திருச்சி போய்ப் பின் தஞ்சாவூர், கும்பகோணம் போய்ப் பின் சென்னை வந்தோம். ஆனால் இதில் பார்த்த வரிசைகள்படி நான் எழுதவில்லை. முக்கியமான கோவில்கள் பற்றி மட்டும் எழுதுகிறேன். ஆகையால் முன்னே பின்னே தான் வரும். வரிசையாக வராது. இப்போ திருவையாறு பற்றி. எல்லாருக்கும் இங்கே நடக்கும் தியாகராஜ உற்சவம் பற்றித் தெரிந்திருக்கும். திருவையாறு என்ற பெயரில் திரு+ஐயாறு கலந்து வந்துள்ளது. ஐந்து ஆறுகள் கலக்கும் இடம் திரு+ஐயாறு ஆகும். அவை காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவை ஆகும். கி.மு.முதலாம் நூற்றாண்டில் இருந்த கரிகால் சோழ மன்னன் காட்டைத் திருத்தி நாடாக்கி வந்த காலத்தில், ஒருமுறை வடநாடு சென்று திரும்பும் வழியில் அவன் தேர் ஒரு இடத்தில் அழுந்தவே, தேரை எடுக்க முயற்சி செய்தான் மன்னன். அப்போது கிடைத்த லிங்கத்தை ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் அந்த இடத்திலே பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு உத்தரவு வர, அப்படியே செய்து ஐயனுக்கு ஒரு கோயில் கட்டுகிறான். கோயிலின் வெளிப் பிரஹாரத்தில் "செம்பியன் மண்டபம்' என்ற பெயரில் ஒரு மண்டபம் கட்டி அங்கே தன் உருவச்சிலையையும், தன் மனைவிமார் சிலையையும் பிரதிஷ்டை செய்கிறான். கோவில் கட்டப் பணம் தேவைப்படவே அரசன் திகைக்கிறான். அப்போது அகப்பேய்ச்சித்தர் வந்து அரசனுக்கு நான்கு பெரிய குளம்படிகளைக் காட்டி அது நந்தி எம்பெருமானின் குளம்படிகள் எனவும், அவற்றுக்குக் கீழே தோண்டினால் நவரத்தினப் புதையல் கிடைக்கும் எனவும் சொல்ல மன்னன் அதே மாதிரி செய்து கோவிலைப் பூர்த்தி செய்கிறான். தற்சமயம் ஒரு தியான மண்டபம் ஆகியிருக்கும் இந்த மண்டபத்தில் அரசு மேற்குறிப்பிட்ட தகவலை எழுதி இருக்கும் பலகை பழுதடைந்து போயிருப்பதால் மிச்சம் உள்ள வார்த்தகளின் மூலம் தெரிந்து கொண்ட தகவல் இது. சற்று மாறுபாடு இருந்தால் யாராவது தெரிவிக்கவும். ஸ்ரீதியாகராஜர் இந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது. பஞ்ச லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கு ஏற்றச் சொல்லி வருவோர் போவோரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 10ரூ கொடுத்தால் 5 விளக்கு. ஒரு வியாபாரம்.

அப்பர் பெருமான் பதிகம் பாடிய தலமும் இது. கைலாயம் செல்ல விரும்பிய அப்பர் இறைவனால் தடுத்தாட்கொண்டு ஒரு பொய்கையில் மூழ்கி எழுந்தபோது திருவையாறில் எழுந்ததாக வரலாறு கூறுகிறது. அப்பருக்குக் கைலையைக் காட்டிய இடம் "தெ கைலாயம்" என்று அழைக்கப் படுகிறது. கோயிலுக்குத் தென்புறம் உள்ள இந்த சன்னதி "பஞ்சவன் மாதேவீச்சுரம்" என்றும் சொல்லப் படுகிறது. இறைவன் தன்னைத் தானே பூஜித்துக் கொண்டதாக ஒரு ஐதீகமும் இந்தக் கோயிலில் உண்டு. அதன் வரலாறு: சிவாசாரியார் ஒருவர் காசிக்குச் சென்றிருந்த சமயம் அவர் ஐயனுக்குப் பூஜை செய்யும் முறை வந்தது. அவரால் உடனே ஊர் திரும்ப முடியவில்லை. அப்போது இறைவனே சிவாசாரியார் வேடத்தில் வந்து தன்னைத்தானே பூஜித்து வந்தார். சிவாசாரியார் வந்து பார்த்து "என்னைப் போல் இருக்கும் நீ யார்" எனக்கேட்க இறைவன் "வா, காட்டுகிறேன்." என்று சொல்லிக் கருவறையினுள் மறைகிறார். இந்த ஐதீகத்தைப் பின்பற்றி இப்போதுமொரு இரும்புப் பேழையில் இரு லிங்கங்களும், ஒரு அம்பாளும் வைத்துப் பூஜிக்கப்படுகிறது.

மூலவர் கருவறை அகழி போன்று இருக்கிறது. மூலவரின் முடி வளர்ந்து வருவதாகவும் அதனால் ஜடாபாரம் கருவறைக்கு வெளியேயும் பரவியுள்ளதால் இந்தக் கோயிலில் மூலவரின் உள்பிரஹாரத்தைச் சுற்றி வரக்கூடாது என்கிறார்கள். தட்சிணாமூர்த்தி பிரஹாரம் என்கிறார்கள். தட்சிணாமூர்த்தியைப் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும். மூலவர்முன் கவசம் இட்டு அதில் பசு, சூலம் பொறிக்கப் பட்டுள்ளது.அம்மன் கோயில் தனியாக உள்ளது. ரொம்ப தூஊஊஊஊஊரம் போய்ப் பார்க்க வேண்டும். அன்னையின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி ஆகும். இங்கே ஐயனுக்குத் தான் விசேஷம்.

சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏழு ஊர்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்ற ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார். அந்தத் தலத்தின் பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர் வலம் முடிந்து ஐயாறப்பர் திருவையாறு கோவிலின் திருவோலக்க மன்றத்தில் இருக்கும் மக்கள் "ஹர ஹர மஹாதேவா, சம்போ மஹா தேவா" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்குமாம். ஏழு ஊர்களிலும் செய்யும் கண்ணாடிச் சப்பரமும் அதன் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்குமாம். ஏழு ஊர்ப் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் காண திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) பெறுகிறது. நாங்கள் திருவையாறு செல்லும்போது திருவேதிக்குடி வழிதான் சென்றோம். உள்ளே போகவில்லை.

No comments: