எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

22. ஸ்ரீசக்ர ராஜ தனயே

ஆகஸ்ட் 15, 2006

அனைத்துக்கும் ஆதாரமான சக்தி வடிவானவள் "ஆதி பராசக்தி" என்று அழைக்கப் படுகிறாள்.எல்லாவற்றிற்கும் ஆதாரமான சக்தியைத் தாய் வடிவில் வழிபடுகிறோம். அந்த சக்தியின் வடிவே ஸ்ரீ லலிதா ஆகும். இவ்வுலகை ஆளும் பரம்பொருளின் சக்திகள் எல்லாம் இணைந்த வடிவே ஆயிரம் நாமங்களால் போற்றித் துதிக்கப் படும் ஸ்ரீ லலிதாம்பிகை. ஆதி பராசக்தியான ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ சக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத, ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வரும் இடம் "திருமீயச்சூர்" என்னும் ஊராகும். இது கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் போகும் வழியில் பேரளம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கே 1 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

இந்தத் "திருமீயச்சூர்" தலத்தில் தான் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த என் பெரியப்பா மாப்பிள்ளை திரு சந்திரசேகரன் அவர்கள் இறை வழிக்குத் திரும்பினார். அந்த விதத்திலும் இது எங்களுக்கு ஒரு முக்கியமான க்ஷேத்திரம் ஆகும். தற்சமயம் "மயன்" என்ற பெயரில் குமுதம் "பக்தி" யில் மாவட்டம், மாவட்டமாகக் கோயில்களுக்குப் போய் வந்து எழுதிக் கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. தற்சமயம் நிறைவேறியது. கும்பகோணத்தில் இருந்து திரு நள்ளாறு போகும் வழியில் சற்று மேற்கே திரும்பி இந்த ஊருக்குப் போனோம்.

உள்ளே போனால் இரண்டு கோயில்கள் இருக்கின்றன. ஒன்று லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாதஸ்வாமி கோயில், (மெயின் கோயில்), மற்றது மின்னும் மேகலை என்னும் அம்பாளுடன் கூடிய ஸகல புவனேஸ்வரரின் இளங்கோயில் ஆகும். சோழர் காலக் கட்டடக் கலையின் சிறப்புக்கள் கொண்ட இந்தக் கோயிலின் பேரழகு வாய்ந்த சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். செம்பியன் மாதேவி, மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியவர்களால் திருப்பணி நடத்தப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களிலும் ஒன்று. கணவன், மனைவி ஒற்றுமைக்குச் சிறந்த சான்று இந்தக் கோயில். ஒருவர் சினம் கொண்டால் மற்றவர் மெளனத்தால் அச்சினத்தை வெல்வதே சிறந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது. இன்றைக்கும் மனவேற்றுமைப் பட்ட கணவன், மனைவியர் இங்கே வந்து வேண்டிக் கொண்டு சேர்ந்து வாழ்வது பற்றிச் சொல்கிறார்கள்.

காசியபரின் மனைவிகளான கர்த்துரு, வினதை இருவரும் குழந்தை இல்லாமல் இறைவனை வேண்ட இறைவன் இருவருக்கும் ஒரு முட்டையைக் கொடுக்கிறார். இருவரும் அதைப் பாதுகாத்துப் பூஜை செய்து வர வினதையின் முட்டையில் இருந்து ஒரு பக்ஷி வெளி வருகிறது. "இதென்ன" என்று வியந்த வினதையிடம் இறைவன், "இந்தப் புத்திரன் மஹாவிஷ்ணுவிற்கு வாஹனமாய் உலகு எங்கும் பிரகாசிப்பான், கருடன் என்ற பெயரில்." என ஆசீர்வதிக்கிறார். கர்த்துரு ஏக்கத்தில் தன் முட்டையை அவசரப்பட்டு உடைக்க தலை முதல் இடுப்பு வரை மட்டும் வளர்ந்த ஒரு அங்கஹீனக் குழந்தை பிறக்கிறது.

வருந்திய கர்த்துரு இறைவனை வேண்ட அவர் அக்குழந்தை "சூரியனுக்குச் சாரதியாக உலகு எங்கும் பிரகாசிப்பான்." என்று வரம் கொடுக்கிறார். அங்கஹீனன் ஆன அவனால் இறைவனைத் தரிசனம் செய்ய முடியாது என்று சூரியன் அவனைக் கேலி செய்கிறான். தொல்லைகள் கொடுக்கிறான். மனம் வருந்திய அருணன் இறைவனை வேண்ட இறைவன் சூரியனை "உன் மேனி கிருஷ்ண வர்ணமாகப் போகக் கடவது" என சபிக்கிறார். உலகம் இருண்டு போனதைப் பார்த்த ஜெகன்மாதா அவன் சாபம் விமோசனம் அடைய இறைவனை வேண்ட அவர் கூறுகிறார்."அருணனின் தவ பலத்தாலும், சூரியன் ஏழு மாத காலம் பூஜை செய்தாலும் பழைய நிலை அடையலாம்" என்கிறார். தன் சாப விமோசனத்திற்காக இத்தலம் வந்து சூரியன் வழிபட, தன் கருமை நிறம் மாறாது போகவே வருந்தி, "ஹே மிகுரா" எனக் கதறத் தங்கள் ஏகாந்தத்தைக் கலைத்த சூரியனை அம்பாள் சபிக்க முற்படுகிறாள். இறைவன் தடுத்து "நீ சாபம் இட்டால் உலகம் மறுபடி இருண்டு போகும். உலகத்தின் நன்மைக்காக நீ பரம சாந்தையாகத் தவம் இருப்பாயாக." என்று கூறுகிறார். சூரியனுக்குச் சாப விமோசனம் கிடைக்கிறது. சாந்த தேவதையான அம்பிகையின் திருவாயில் இருந்து "வசினீ" என்ற வாக்தேவதைகள் தோன்றி அவர்கள் மூலம் மலர்ந்ததுவே ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்று கூறுகிறார்கள்.

அம்பாளே அருளியதால் அவர்தம் பெயர் கொண்டு "லலிதா சஹஸ்ரநாமம்" என்னும் பெயர் கொண்டு விளங்கியதாகச் சொல்கிறார்கள். அம்பாளிடம் இருந்து நேரே ஸ்ரீஹயகிரீவ முனியும் அவரிடம் இருந்து அகத்தியரும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் பெற்றதும் இவ்வூரில் தான். அம்பிகையை வழிபடச் சிறந்த இடம் என அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் வந்து வழிபடும் சமயம் அம்பிகை நவரத்தினங்களாகக் காட்சி அளிக்கிறாள். அப்போது அந்தக் காணற்கரிய காட்சியை அகத்தியர் தன் "லலிதா நவரத்தின மாலை"யின் மூலம் பதிவு செய்திருக்கிறார். சூரியன், அருணன், கர்த்துரு, வினதை, அகத்தியர் தவிர யமனும் ஸ்ரீலலிதையையும், மேகநாத ஸ்வாமியையும், 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் சங்குகள் 1008-ஐக் கொண்டு சங்காபிஷேஹம் செய்து வழிபட்டிருக்கிறான். இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீலலிதையின் பெருமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இதற்குச் சாட்சியாக 1999-ல் பங்களூரில் உள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்மணியிடம் அம்பாள் கனவில் வந்து தனக்குக் கொலுசு செய்து அணிவிக்குமாறு கட்டளையிடக் கோவிலைத் தேடிக் கண்டுபிடித்து அப்பெண்மணி கொலுசு செய்து அணிவித்திருக்கிறார்.

"கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி
நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர் பெருகும்
பிழை என் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக
எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய் மாதா ஜயஓம்
லலிதாம்பிகையே, மாதா ஜயஓம் லலிதாம்பிகையே,
மாதா ஜயஓம் லலிதாம்பிகையே!"

No comments: