எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

3. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 2

மே 07, 2006

முதல் நாள் சுப்ரமண்யாவில் இருந்து மங்களூர் திரும்பும் வழியில் மங்களூர் கோயில்கள் எல்லாம் பார்த்துக்கொண்டு வரும்போது டிரைவரிடம் மறுநாள் சீக்கிரம் வரும்படிக் கேட்டுக் கொண்டோம். அதன்படி திரு நசீரும் காலை 5-30 மணிக்கு வந்தார். நல்ல அருமையான காலை நேரம். சுகமான காற்று. பயணம் இனிமையாக இருந்தது. வழியில் நேத்ராவதி ஆற்றைக் கார் கடந்தது. கர்நாடகாவிற்கு எவ்வளவு இயற்கை வளங்களை ஆண்டவன் கொடுத்திருக்கிறான் என்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. தண்ணீருக்குக் கூடப் பிறரிடம் கை ஏந்தும் நிலையில் இருக்கும் நாம் இருக்கும் கொஞ்ச வளங்களையும் அழித்துக் கொண்டு இருக்கிறோம். தாமிரபரணி நதியை விட்டால் தமிழ் நாட்டில் உற்பத்தி ஆகும் நதி எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நேத்ராவதி ஆற்றுக்குப்பின் 2,3 இடங்களில் back water எனப்படும் இடங்களை வண்டி கடந்து "கட்டீல்" என்னும் க்ஷேத்திரத்தை நோக்கிப் போனது. மங்களூரில் இருந்து கட்டீல் 10 அல்லது 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் உள்ளது. கட்டீல் என்றால் இடுப்பு என்று அர்த்தமாம். கோவில் ஆற்றின் நடுவில் அதன் இடுப்புப் போன்ற பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இந்தப்பெயர்.

ஜாபாலி முனிவரின் யாகத்திற்காக அவர் காமதேனுவின் உதவியை நாட அது தன் மகளான நந்தினியின் உதவியுடன் யாகத்தை முடிக்கச் சொல்கிறது. நந்தினியோ முனிவருக்கு உதவ மறுக்க முனிவர் அதைத் தண்ணீராக மாறும்படி சபிக்கிறார். மனம் வருந்திய நந்தினி சாபவிமோசனம் வேண்ட" நீ பூ உலகில் ஒரு நதியாக ஓடிக் கொண்டிரு. அப்போது தேவியானவள் உன் இடுப்பில் குழந்தை வடிவில் உட்கார்ந்து கொள்ளும்போது உனக்கு சாபவிமோசனம்" என்கிறார் முனிவர். தேவியை நந்தினி வேண்ட தேவியும் அருள் பாலிக்கிறாள். குழந்தை ரூபத்தில் வரும் தேவியைத் தன் இரு கைகளாலும் எடுத்து அணைத்துத் தன் இடுப்பில் வைக்க நந்தினிக்குச் சாப விமோசனம் கிடைக்கிறது. ஆனால் பூ உலக மக்களின் நன்மைக்காக நந்தினியை அதன் சக்தியை ஆறாக மாற்றி ஓடும்படி தேவி கேட்டுக்கொள்கிறாள். தானும் இந்த வடிவிலேயே ஆற்றுக்கு நடுவில் கோயில் கொள்வதாகவும் சொல்கிறாள். அதன்படி ஏற்பட்டது தான் கட்டீல் ஸ்ரீ ஜலதுர்கா கோயில்.

கோயில் கேரள பாணியில் தான் உள்ளது. தென் கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கோயில்களும் கேரள பாணியில் தான் உள்ளது. இதையும் பரசுராம க்ஷேத்திரம் என்று தான் கூறுகிறார்கள். கோயில் மட்டுமில்லாமல் வழிபாடு முறைகளும் கேரளப்பாணிதான். நாங்கள் போன போது கோயில் ஊழியர்களையும் சில உள்ளூர் பக்தர்களையும் தவிர யாரும் இல்லை. ஆகவே தரிசனம் நன்றாக இருந்தது. எல்லாக் கோயில்களிலும் நாம் வரிசையில் வரும்போதே பிரஹாரம் சுற்றி விடும்படியான அமைப்புடன் உள்ளே விடுவதால் பிரஹாரமும் சுற்ற முடிகிறது. அம்பாள் தரிசனம் முடிந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம். அங்கேயே ஒரு ஹோட்டலில் காபி என்ற பெயரில் கொடுக்கப்பட்ட ஒரு திரவத்தைக் குடித்துவிட்டு அங்கிருந்து உடுப்பி நோக்கிப் புறப்பட்டோம்.

No comments: