எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

4. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 3

மே 07, 2006

உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் முழுக்க முழுக்க சாளிகிராமத்தால் ஆனவர். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆணையின் பெயரில் விஸ்வகர்மா என்னும் தேவதச்சன் இதைச் செய்து முடிக்கிறான். துவாபரயுக முடிவில் தேவகிக்குத் தான் தன் குழந்தையான ஸ்ரீகிருஷ்ணரின் பால லீலைகளைப் பார்க்க முடியவில்லை என்று வருத்தப் படுகிறாள். தன்னைப் பெற்ற தாயின் வருத்தம் தீரக் கிருஷ்ணர் தன் தாயான தேவகிக்கு மீண்டும் பாலலீலைகளை நிகழ்த்திக் காட்டுகிறார். அதை மறைந்திருந்து பார்க்கும் ருக்மிணி அந்த பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், வெண்ணை திருடி உண்ணும் பாலகன், யசோதையிடம் திருவாய் திறந்து உலகம் காட்டிய கண்ணனின் பாலலீலைகளில் மெய்மறந்து அந்த பாலரூபம் தனக்கு தினமும் தான் பூஜை செய்து வழிபட ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கண்ணனிடமே கண்ணனைத் தருமாறு கேட்கிறாள். கண்ணனும் இசைந்து விஸ்வகர்மாவிடம் சொல்லிச் செய்து தரச் சொன்ன அந்த பாலகிருஷ்ணன் ஒரு கையில் மத்தோடும், மறு கையில் கயிறோடும் இருக்கிறான். ருக்மிணி பூஜை செய்து வந்த அந்த விக்ரஹம், அர்ஜுனன் கையில் கிடைக்க அவன் அதை ருக்மிணியின் தோட்டத்தில் மறைத்து வைக்கிறான். காலப்போக்கில் அந்த விக்ரஹம் கோபிச்சந்தனத்தால் மூடப் படுகிறது. துவாரகாவிலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு சிறிய கப்பலில் அந்த விக்ரஹம் கோபிச்சந்தனத்தால் மூடப்பட்ட நிலையில் ஏற்றப்பட்டு மேற்குக்கடற்கரைப் பகுதிக்கு வியாபாரத்திற்கு வருகிறது. உடுப்பிக்கு அருகில் "வடபண்டேஸ்வர்" என்னும் கடற்கரைப் பட்டினத்திற்கு அருகில் வரும்போது புயற்காற்று அடிக்கிறது. பகவான் ஸ்ரீமத்வருக்கு ஞானதிருஷ்டியில் கப்பலும் அதற்குள் கோபிச்சந்தனத்தால் மூடப்பட்ட கிருஷ்ணரும் தெரிகிறார்கள். உடனே அவர் கடற்கரை நோக்கி போய்த் தன் மேல்வஸ்திரத்தை வீசிக் காற்றை நிறுத்துகிறார். கப்பல் தலைவன் அவரின் புனிதம் உணர்ந்து தன் கப்பலையே அவருக்குக் காணிக்கையாக்குகிறான். ஆனால் மத்வரோ அந்த கோபிச்சந்தனத்தோடு திருப்தி அடைகிறார்.

No comments: