எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 11, 2007

சிதம்பர ரகசியம் - லிங்கத் திருமேனியை ஒரு தரிசனம்!




தட்சிணா மூர்த்திக்கு அடுத்துப் "பல்லிஸ்வரர்" என்பவரின் சன்னதி உள்ளது. பல்லியின் சொல்லுக்குப் பலன்கள் உண்டு என்றும், பல்லி உடலின் எந்தப் பாகத்தில் விழுகிறது என்பதற்குத் தகுந்தாற்போல் பலன் உண்டு என்பதும் மக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் கெடுபலனக்ள் இந்த ஈஸ்வரரின் தரிசனத்தால் விலகும் என்றும் க்ஷேத்ரபாலகர்களில் இவரும் ஒருவர் என்றும் சொல்கின்றனர். அடுத்து வருவது வல்லப கணபதி. சுப்ரமணியர் தாரகன் வதத்துக்குப் போகும்போது இவரை வணங்கி அருள் பெற்றுச் சென்றதாய் ஐதீகம்.

இந்த சன்னதிக்குப் பின் வருகிறது ஒரு சிறிய கோயில். நடராஜர் கோவில் கொள்ளும் முன்பு, இது தான் மூலஸ்தானமாய் இருந்தது எனச் சொல்லப் படுகிறது. லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் ஈசனை, மூலநாதர் எனச் சொல்கின்றனர். பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் இந்த மூலநாதரைத் தான் முதலில் வழிபட்டு வந்ததாயும், பின்னர் தான் நடராஜ தரிசனம் கிடைக்கப் பெற்று ஆனந்தத் தாண்டவக் கோலத்தைத் தாங்கள் எந்நாளும் கண்டு கொண்டு இருக்க வேண்டும் என்பதால் நடராஜரை இங்கே கோயில் கொள்ள வேண்டினார்கள் என்றும் சொல்கின்றனர். மேலும் இந்த மூலநாதர் ஜைமினி ரிஷியாலும், உபமன்யுவாலும், ராஜா ஹிரண்ய வர்மனாலும் வணங்கப் பெற்றிருக்கிறது. அம்மன் பெயர் உமாம்பிகை. அம்மன் சன்னதியும் பக்கத்திலேயே உள்ளது. இந்த மூலநாதருக்கும் அம்பிகைக்கும் அந்த, அந்தக் கால பூஜைகள், வழிபாடுகள் தீட்சிதர்களாலே செய்யப் படுகிறது.

மூலநாதர் கோவிலைச் சுற்றிக் காணப் படுகின்ற இறை ரூபங்களில் குணேச கணபதி, காசி விஸ்வநாதர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், கல்பக விருஷம், வைதீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமியும், தெய்வநாயகியும், 63 நாயன்மார்கள், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றவர்கள் ஆவார்கள். இதை அடுத்துக் காணப்படுவது, மத்யார்ஜுன க்ஷேத்ரம் என்று சொல்லப் படும் திருவிடைமருதுரின் ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமியின் லிங்கத் திருமேனியும், ப்ருகத்-குஜாம்பிகையும். இந்த மத்யார்ஜுன க்ஷேத்திரத்தில் அம்பாள், சிவனைத் தன் இருதயத்தில் வைத்து, "அதி தெய்வீகி" முறையில் வழிபட்டதால் இந்த லிங்கத் திருமேனியை மகாலிங்கம் எனக்குறிப்பிடுகின்றனர். அடுத்து அருணாசலேஸ்வரரும், தர்ம சாஸ்தாவுக்கும் என ஒரு தனி சன்னதியும் உள்ளது. இதை அடுத்துக் காணப்படும் கல்யாண மண்டபம், யாகாசாலையை அடுத்து நாம் கோவிலின் வெளியே வந்து கோபுரங்கள் இருக்கும் திருச்சுற்று வழியாகப் போய் சிவகங்கைக் குளத்தையும் அதன் அருகே இருக்கும் அன்னை சிவகாமியையும் தரிசனம் செய்வோமா?

4 comments:

அபி அப்பா said...

கீதாம்மா!மஞ்சள் தடவிய அந்த கற்பக விருட்ஷத்தின் கீழே இருந்து மனதால் வணங்கி கொண்டிருக்கும் போது ஒரு தடவை சிலிர்த்து விட்டது இப்போது!

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா, அப்படியே ஒரு பிரகார வலம் வந்த திருப்தி.....நன்றி கீதாம்மா.

TBCD said...

நீங்கல்லாம்ச் சேர்ந்துத் தான்..ஏத்தி விடுறீங்களா...நடக்கட்டும்..நடக்கட்டும்..

மெளலி (மதுரையம்பதி) said...

TBCD-2, யாரு, யார ஏத்திவிடுறாங்க?....கொஞ்சம் விளக்குங்களேன்... :-)