எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, October 26, 2007

சிதம்பர ரகசியம் -இறைவனை அனைவரும் வணங்கலாமே!




மஹாவிஷ்ணு ஒரு சமயம் தனக்குப் பிள்ளை வரம் வேண்டிப் பிரார்த்தித்தார், இறைவனையும், அன்னையையும். அவருக்கு வரம் அளிக்க இறைவன், அன்னையுடன் நேரிலே வந்தார். இறைவனும் விஷ்ணுவுக்கு வரம் அளித்தார். அப்போது அவர் அன்னையுடனும், ஸ்கந்தனுடனும், சோமாஸ்கந்தனாக வந்திருந்த கோலம் விஷ்ணுவின் மனதை மிகவும் கவர்ந்தது. இந்தக் கோலத்திலேயே தான் பூஜிக்க ஒரு சிற்பம் வேண்ட இறைவனும் அருளினார். அந்த மூர்த்தம் தான் இந்தத் தியாகராஜா இவர் தான் சப்த விடங்கர்களில் முதல்வர். முதல் முதல் விஷ்ணுவிடம் இருந்தவர். இவரின் இந்தக் கோலத்தை மனதிலேயே நினைத்து, நினைத்து, விஷ்ணு, அந்தக் கோலத்துக்கு ஏற்றத் தாளத்தை மனதிலேயே கொண்டு வந்து திரும்பத் திரும்ப நினைக்க இறைவனின் நாட்டியக் கோலம் தென்பட்டது, அவருக்கு. மனதிலே தாளத்தைச் சொல்லிக் கொண்டதாலும் இறைவனின் அந்தத் தோற்றம் தவளையை நினைவுறுத்துவதாயும் இருந்தமையால் இந்தத் தாளத்துடன் கூடிய வடிவுக்கு "அஜபா நடனம்" என்ற பெயர் ஏற்பட்டதாய்த் திருவாரூர்த் தல புராணம் சொல்லுகிறது.

பின்னர் அந்த விக்ரஹம் ராஜா முசுகுந்தனுக்கு விஷ்ணு அளித்ததாகவும், அதை இந்திரன் கவர்ந்து கொண்டு சென்றதாயும் இந்திர லோகம் சென்று முசுகுந்தன் விக்ரஹத்தைத் திரும்பக் கேட்கும்போது, ஒரே மாதிரியான 7 வடிவங்களை இந்திரன் காட்டி இவற்றில் உன்னுடையது எதுவெனத் தெரிந்து நீயே எடுத்துக் கொள் என்றதாயும், இறை அருளால் உண்மையான சிலா வடிவை முசுகுந்தன் கண்டறிந்ததாயும் கூறுகின்றனர். அவனுடைய இறை பக்தியை மெச்சியே இந்திரன் 7 விடங்கர்களையும் அளித்ததாயும் அவையே முன் பதிவுகளில் வந்த கோவில்களில் நிறுவப் பட்டதாயும் கூறுகின்றனர். இதை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன்.
*************************************************************************************

கோயில் என்றால் சைவர்களுக்குச் சிதம்பரம் தான். வைணவர்களுக்கோ ஸ்ரீரங்கம் தான் கோயில். இங்கே நடராஜா விழித்துக் கொண்டு இடைவிடாது ஆடிக் கொண்டே இருக்கிறார். அங்கேயோ மாறாக ரங்கராஜா நீள நெடுகப் படுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்றாலும் இருவரின் தொழிலும் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் கோயிலைப் பல சிவனடியார்களும், வைணவ அடியார்களும் வணங்கி வந்தாலும் குறிப்பிடத் தக்கவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி, வியாக்ரபாதரின் மகன் உபமன்யு, ஜைமினி ரிஷி, பிருங்கி ரிஷி, இந்திரன், வருணன், போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். சரித்திர பூர்வமாய்ப் பார்த்தோமானால், மன்னன் ஹிரண்ய வர்மன் காலத்தில் இருந்து திருநீல கண்டர், திருமூலர், மாணிக்க வாசகர், திருஞான சம்மந்தர், அப்பர், சுந்தரர், நந்தனார், போன்ற நாயன்மார்களும், பின்னர் வந்த நாட்களில் உமாபதி சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர், ராமலிங்க ஸ்வாமிகள், போன்ற சிவனடியார்களும் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களும் குறிப்பிடத் தக்கவர்கள்.

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நான் கேட்ட கேள்விக்கு பதில் வந்துவிட்டது...அத்துடன் அஜபா நடனம் என்பதும் புரிந்தது. நன்றி கீதாம்மா

ரசிகன் said...

// அஜபா நடனம்"//

எனக்கு "ஜீன்ஸ் படம்- அதிசயம் பாட்டுல வர்ர 'அஜபா"வுக்கு மீனிங் கெடச்சிடுத்து,வாழ்க வைரமுத்து..

// "சிதம்பர ரகசியம் //
ஏனுங்க கீதா அக்கா.. இப்புடி எல்லாருக்குமே நீங்க சொல்லிட்டாக்கா அது எப்புடி இன்னும் ரகசியமாவே இருக்கும்?ம்?ஹிஹி... [ தலைகீழா தொங்கி யோசிப்போர் சங்கம் ஒன்னு துவங்கிட்டோமில்ல..]