எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, May 16, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சதாசிவ மூர்த்தி!


பஞ்ச முக லிங்கங்கள் தவிர்த்து, ஈசனின் ஆறாவது முகமும் உள்ளது. இந்த ஆறாவது முகம் கீழ்நோக்கியே காணப் படுகிறது. இது "அதோ முகம்" என அழைக்கப் படுகிறது. ஈசனின் ஐந்தாவது முகம் மேல் நோக்கி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டும், ஆறாவது முகம் கீழ் நோக்கி பாதாளத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும். இந்த ஆறாவது முகம் நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றாகும். இந்த ஆறு முகங்களில் இருந்தும், அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து விளைந்த நெருப்புப் பொறிகளில் தோன்றியவரே முருகப் பெருமான் ஆவார். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் பொங்கி வந்த போது, அதை விழுங்கியது இந்த ஆறாவது முகமே எனவும் சொல்லப் படுகிறது.

ஆகவே ஈசனின் நீலகண்டமே ஆறாவது முகமாய்க் கருதுவோர்களும் உண்டு. ஆறுமுகங்களுடன் கூடிய லிங்கங்கள் எங்கும் வழிபாட்டுக்குக் காணக் கிடைக்கவில்லை. ஏனெனில் முருகப் பெருமானே சிவ ஸ்வரூபம் என்பதால் அவரே ஆறுமுக, சிவனாய்க் கருதி வழிபடுவோரும் உண்டு. திருவானைக் காவில் உள்ள தென் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகரும், மற்றொரு லிங்கத்தில் முருகப் பெருமானும் காணப் படுவதாய்ச் சொல்கின்றனர். காஞ்சியில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோயிலிலும், முன் மண்டபத்தின் லிங்கத் திருமேனியில் பிடாரியின் உருவம் அமைக்கப் பட்டு, சக்தி லிங்கம் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். அடுத்து சதாசிவ மூர்த்தி பற்றிப் பார்ப்போமா?

திருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:
"கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே!" (ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று)
எனக் கூறுகின்றார்.
சதாசிவ வடிவத்துக்கு முகம் ஐந்து, திருப்பாதங்கள் இரண்டு, பத்துக் கைகள், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களாக மொத்தம் பதினைந்து கண்கள் இவற்றோடு தாமரைப் பீடத்தில் நிற்பதாய்க் கூறுகின்றார்.


சதாசிவ மூர்த்திக்கு ஐந்து முகங்கள் இருப்பதாய் அறிகின்றோம். சிவ ஆகமங்களை அந்த ஐந்து முகங்களில் இருந்தும் உபதேசிக்கும் பொருட்டு ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பதாயும் ஆன்றோர் கூறுகின்றனர். ஒவ்வொரு திருமுகமும் ஒவ்வொருவருக்கு உரியது எனவும் சொல்லப் படுகின்றது. கிழக்குப் பார்த்த திருமுகம் ஈஸ்வரனுக்கு உரியது எனவும், அதைத்
"தத்புருஷம்" என அழைப்பதாயும், மேற்கே பார்க்கும் முகம் பிரம்மனுக்கு உரியது எனவும், "சத்யோ ஜாதம்" என அழைக்கப் படுவதாயும், தெற்கே பார்க்கும் முகம் ருத்ரனுக்கு உரியது எனவும், "அகோர முகம்" என அழைக்கப் படுவதாயும், வடக்கே பார்க்கும் திருமுகம், விஷ்ணுவுக்கு உரியது எனவும், "வாமதேவம்" என அழைக்கப் படுவதாயும், உச்சியில் விளங்கும் சதாசிவனின் முகம் "ஈசானம்" எனவும் அழைக்கப் படுவதாய் அறிகின்றோம். ஈசனின் ஐந்தொழில்களையும் குறிக்கும் இவை எனவும் சொல்லப் படுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளுதல் என்னும் ஐந்தொழில்களயும் ஐந்து முகங்களும் குறிக்கின்றன என்றும் தெரிந்து கொள்கின்றோம்.




நான்கு திக்குகளிலும் உள்ள நான்கு முகங்களாலும் முறையே ஐந்து வீதம் 20 ஆகமங்களும், உச்சியில் உள்ள ஈசான முகம் 8 ஆகமங்களையும் அருளியதாய்ச் சொல்லப் படுகின்றது. மேலும் இந்த மேற்கண்ட ஐந்து மந்திரங்களாலேயே ஈசனின் உடல் ஆனது என்றும் அறிகின்றோம். சாமானியமான நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வடிவம் கொண்ட இந்த உடலில் உள்ள ஐந்து வித சக்திகளே, ஈசனின் ஐந்தொழில்களுக்கும் காரணமாகவும், காரியமாகவும் ஆகின்றது. உலகுக்கு எல்லாம் ஈசனாய் இருந்து ஞானத்தை அந்த ஞான வடிவான ஈசன் அருளுவதால் இவரை ஈசான மூர்த்தி, அகோர மூர்த்தி, வாமதேவர், சத்யோஜாதர், சதாசிவம் என்று எல்லாம் அழைக்கின்றோம். இவரை ஐந்து மட்டுமில்லாமல் 25 முகங்கள் வரையும் கொண்டவராயும் சித்திரிக்கப் படுகின்றார். ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலிலும் சதாசிவ மூர்த்தியின் வடிவங்கள் காணப் படுகின்றது. சென்னை ம்யூசியத்தில் இவரின் செம்புத் திருமேனி காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ளதாயும் அறிய வருகிறது.

இந்த சதாசிவ மூர்த்தியில் இருந்து தோன்றியவராய்ச் சொல்லப் படும் மகேச மூர்த்தியைப் பற்றி அடுத்துக் காணலாம்.

டிஸ்கி: சதாசிவ மூர்த்தி படத்தை மறந்து போய்ப் போன பதிவிலே போட்டுட்டேன்.மன்னிக்கவும்.

No comments: