எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 13, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள்வாழ்க! காமதகனர்!


தாருகாவனத்து ரிஷிகள் அபிசார ஹோமம் செய்து யானையை ஏவி விட்டது பற்றிப் படித்தோம் அல்லவா?? அந்த யானை ஏவி விடப் பட்டதும் பிட்சாடனக் கோலத்தில் இருந்த ஈசனை நெருங்க, ஈசனும் சற்றும் தயங்காமல் அந்த யானையின் பெரிய வாய்க்குள் புகுந்து மறைந்தார். அருகே இருந்த அம்பிகையானவள் திகைத்து, அஞ்சி ஓட, பிரபஞ்சமே ஸ்தம்பித்து நின்றது. சூரிய, சந்திரர்களின் இயக்கம் நிற்க, காலங்கள் தடுமாற, உலக இயக்கமே நின்றுவிட்டது. ஆனால் உள்ளே போன மகேசன் சும்மாவா இருந்தார்?? யானைக்குப் பெரும் தொந்திரவு ஏற்பட்டது மகேசனை விழுங்கியதால். அருகே இருந்த ஒரு குளத்திற்குப் போய் அங்கே விழுந்து, புரண்டு எழுந்தும் அதற்குத் தாங்க முடியவில்லை. ஓலமிட்டது யானை. அப்போது அதன் உடலைக் கிழித்துக்கொண்டு, மத்தகத்தைப் பிளந்துகொண்டு வெளிப்பட்டார் கஜசம்ஹார மூர்த்தி. யானையின் உடலைக் கிழிக்கும் இவர் கோலத்தில் உள்ள மூர்த்தம் மாயூரத்திற்கு அருகே உள்ள வழுவூரில் காணப் படுகின்றதாய்க் கேள்விப் படுகின்றோம். இந்த மூர்த்தத்தின் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அது பற்றிய மேலதிகத் தகவல்கள் கொடுக்கப் படும்.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்


காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்

திருநாவுக்கரசரின் வழுவூர் வீரட்டானம் பற்றிய தேவாரப் பாடல்களில் சில வரிகளைக் காணலாம்.






அடுத்து நாம் காணப் போவது யோகத்தில் இருக்கும் காம தகனர். காமனை எரித்ததால் காமதகனர் என்று சொல்லுகின்றோம். உண்மையில் தட்சிணாமூர்த்தி சொரூபத்தின் இன்னொரு வடிவமே இவர். தட்சிணா மூர்த்தியாக இவர் ஒரு க்ஷண நேரம் நீடிக்க அது பெரும் ஊழிக்காலமாக மாற, தேவாதி தேவர்கள் உலகின் சிருஷ்டியும், இயக்கமும் நின்றுவிடுமோ என அஞ்சி, இறைவனிடம் காமனை ஏவுகின்றார்கள். காமன் ஏன் ஏவப் படுகின்றான்? அவனுக்கு என்ன ஆகின்றது என்று சற்று விபரமாய்ப் பார்க்கலாமா?? அனைவருக்கும் பலமுறை சொன்ன, நன்கு தெரிந்த கதை தான் இது. ஆகவே சுருக்கமாய்ச் சொல்லுகின்றேன்.

தட்சப் பிரஜாபதியின் யாகத்துக்குத் தன் மருமகன் ஆன ஈசனை அழைக்கவும் இல்லை. அவருக்கு உரிய அவிர்பாகத்தை அவன் கொடுக்கவும் இல்லை. ஈசனை மணந்த தட்சன் மகள் தாட்சாயணி ஆகிய அம்பிகை மனம் கேட்காமல் யாகத்துக்குச் சென்று தந்தையைக் காரணம் வினவ, அவனோ மகள் என்றும் பாராமல் தாட்சாயணியை அவமானம் செய்கின்றான். அவமானம் தாங்க முடியாத தாட்சாயணி தட்சனால் கிடைக்கப் பெற்ற உடலை நீக்க எண்ணி யாக குண்டத்துக்குள் புகுந்து, உயிர்த் தியாகம் செய்ய, இறைவன் தட்சனை அடக்க வீரபத்திரரை ஏவுகின்றார். வீரபத்திரர் வந்து தட்சனை அடக்கியபின்னர், அம்பிகையின் திருவுளப் படியே அவள் இன்னொரு பிறவி எடுத்துத் தம்மை வந்தடைய அருள் புரிகின்றார் ஈசன். அந்தச் சமயம் இமவான் குழந்தை வரம் வேண்டித் தவம் இருக்க அவன் காணுமாறு அம்பிகையை அவன் மகளாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்ட அம்பிகையானவள் அவ்வாறே ஒரு தாமரைத் தடாகத்தில் பூத்த பெரியதொரு தாமரை மலரில் ஒரு குழந்தையாகத் தோன்றுகின்றாள். அழகான குழந்தையைக் கண்ட இமவான் அந்தக் குழந்தையைப் போற்றிப் பாசம் காட்டித் தன் உயிரினும் இனிய மகளாய் வளர்த்து வருகின்றான். அம்பிகையோ தன் உள்ளத்தால் ஏற்கெனவே தன் பதியாக இருந்த ஈசனைத் தவிர வேறொருவரைத் தன் கணவனாய் ஏற்க முடியாது என்று எந்நேரமும் ஈசன் நினைவிலேயே இருந்து வந்தாள். அவள் நிலையைக் கண்ட இமவான், அவள் தவம் இயற்ற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருகின்றான். அம்பிகை தவம் மேற்கொள்ள, இங்கே ஈசனோ அம்பிகையைப் பிரிந்த நிலையில் மோனத் தவம் செய்து யோகியாக வீற்றிருக்கின்றார்.

ஞானம் பெற வேண்டி ஈசனை வந்தடைந்த சனகாதி முனிவர்களுக்கு அவர் ஞானம் என்பது சொல்லில் அடங்குவதன்று என்பதைப் புரியவைக்கும் சின்முத்திரையைக் காட்டி யோக தட்சிணா மூர்த்தியாக அமருகின்றார். அவரின் இந்த மெளனத்திலேயே அனைத்தும் புரிந்த மாணாக்கர்களாய் சனகாதி முனிவர்களும் அவர் காலடியிலேயே அமருகின்றனர் சீடர்களாய். ஒரு க்ஷண நேரமே நீடித்ததாம் இந்தச் சின்முத்திரைக் கோலத்தில் தட்சிணா மூர்த்தி சொரூபமாய் ஈசன் அமர்ந்த கோலம். அந்த ஒரு க்ஷண நேரமானது இங்கே மாபெரும் ஊழிக்காலமாய் நீண்டது. உலக இயக்கம் ஸ்தம்பித்தது. அம்பிகையை ஈசன் பிரிந்து இவ்வாறு யோகத்தில் ஆழ்ந்து யோக தட்சிணாமூர்த்தியாக இருந்தவண்ணமே இருந்தால், உலகின் இயக்கத்துக்கு அர்த்தமே இல்லை என்றுணர்ந்த தேவாதிதேவர்கள் அவரின் யோகத்தைக் கலைக்க மன்மதனை ஏவுகின்றனர்.

அம்பிகையை மணந்து ஈசன் யோகத்தில் இருந்து போகத்துக்கு மீண்டாலே உலக இயக்கமும் சரிவர நடக்கும், அரக்கர்களின் துன்பமும் தொலையும். காமனைக் கூப்பிட்டு செய்யவேண்டியதைச் சொல்ல காமனோ மனம் கலக்கமுறத் தன்னால் இயலாத ஒன்று என்றுணர்ந்து மறுத்தான். ஆனால் பிரம்மாவோ கோபம் மிகக் கொண்டு காமனைச் சபிக்கக் கிளம்ப, பிரம்மாவின் கோபத்துக்குச் சிவனின் கோபத்தால் உயிர் நீப்பதே பெரியது என நினைத்த மன்மதன், தன் வாகனம் ஆகிய கிளியின் மீது ஏறிக் கொண்டு, தென்றல் காற்றைத் தேராய்க் கொண்டு, கரும்பினால் ஆன வில்லை ஏந்திக் கொண்டு, குயில் கூவி அழைக்க, கடல் ஆர்ப்பரித்து முழங்க, மலர்க்கணைகளைத் தயார் செய்து கொண்டு, தன் இனிய மனனயாள் ஆன ரதிதேவியுடன் திருக்கைலை வந்தடைந்தான் காமதேவன். ஈசன் ஆழ்ந்த மோனத்தில் தவம் இருக்கின்றார். ஒரு அசைவில்லை. கலக்கத்துடனும், தயக்கத்துடனும், தன் மலர்க்கணையை எடுத்து அவர் மீது ஏவினான் மன்மதன். மலர்க்கணைகளின் தொடுகை தெரிந்ததுமே தன் கண்களைத் திறந்தார் ஈசன். கூடவே நெற்றிக் கண்ணும் திறக்கவே அதிலிருந்து கிளம்பிய கோபாக்கினியில் எரிந்து சாம்பல் ஆனான் மன்மதன். ரதிதேவி கலங்கி, புலம்பி அழ, அவள் நிலை கண்டு வருந்திய ஈசன் சாம்பல் ஆனவனை உருவம் கொள்ளச் செய்ய முடியாது என்பதால் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படியான அருவ நிலையில் அவன் இருப்பான் என்று அருள் புரிகின்றார். பின்னாட்களின் மன்மதனை அநங்கன் என்று சொல்ல ஆரம்பித்ததின் காரணமும் இது தான்.

இவ்வாறு காமனை எரித்த நிலையில் ஈசன் இருக்கும் கோலமே காமதகனர் என்று சொல்லப் படுகின்றது. மன்மத பாணத்துக்கும் மயங்காத ஈசனை அன்னையின் தவமே கலைத்தது என்பது ஸ்காந்த புராணம் நமக்குச் சொல்லும் செய்தி. இவரை யோக தட்சிணா மூர்த்தி எனவும் சொல்லுவார்கள். இந்த அரிய கோலம் மாயவரத்துக்கு அருகில் உள்ள திருக்குறுக்கை என்னும் ஓர் ஊரில் காணப் படுவதாய்த் தெரிகின்றது. இது அட்டவீரட்டானத் தலங்களிலும் ஒன்று எனவும் அறிகின்றோம். காமத்தையே எரித்ததால் இறைவனுக்குக் காமதகனர் என்று பெயர் வந்தது. காமனின் திருமணமும், அதை ஒட்டிய காமதகனமும் இன்றும் கிராமப் புறங்களில் அறுவடைக்குப் பின்னர் வரும் மாசி, பங்குனி மாதங்களில் பெளர்ணமி தினத்தில் நடைபெறுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.


படங்கள் நன்றி: கூகிளார்

3 comments:

sury siva said...

அறியாதன அறிந்தேன்.

நன்றி.

சுப்பு ரத்தினம்.

நாடி நாடி நரசிங்கா! said...

Om nama shivaya!
intersting kamadaganar story.

thanks
rajesh

Geetha Sambasivam said...

@சூரி சார்,
@ராஜேஷ், இருவருக்கும் நன்றி.