எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 29, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! லிங்கோத்பவர்!


லிங்கோத்பவர் நாம் நன்கறிந்தவர். லிங்கம் என்பது உருவம். அந்த லிங்கம் வெளிப்பட்டதையே லிங்கோத்பவம் என்று கூறுகின்றனர். உருவே அற்ற பரம்பொருள் ஒரு உருவைத் தாங்கி நம்மையெல்லாம் உய்விக்க வந்ததையே லிங்கோத்பவம் என அழைக்கின்றனர். பிரளய காலத்தின் முடிவில் உலக உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கையில் ஈசன் தம்மிலிருந்து பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞாந சக்தி, க்ரியா சக்தி ஆகியோரைத் தோற்றுவிக்கிறார். ஐந்து சக்திகளில் இருந்தும் தோன்றும் தத்துவங்களை சதாசிவ தத்துவம் என்றழைக்கப் படும். இந்த சதாசிவ தத்துவத்தில் முதலில் சூன்யமாக ஒன்றுமில்லா நிலையில் உருவற்று இருந்த பரம்பொருளானது பின்னர் மின்னலைப் பழிக்கும் ஒளியாக மாறி, அந்த ஒளி அனைத்தும் சேர்ந்ததொரு ஒளித்தூணாக ஆகி, அந்தத் தூணிலிருந்து வெடித்துக்கிளம்பும் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்ட ஈசனாக வந்து பின்னர் நான்கு முகங்களோடும், எட்டுக்கரங்களோடும் காட்சி அளித்துப் பின்னர் ஐந்து முகம் கொண்ட சதாசிவராக காட்சி அளிப்பார். இப்படித் தான் ஒன்றுமற்ற சூன்யத்தில் இருந்து நமக்குக் காட்சி தரும் ஈசனின் வடிவம் உற்பத்தி ஆனது என்பதை லிங்கோத்பவம் என்று அழைக்கின்றனர். ஒளித்தூணாகக் காட்சி தருவதே ஜ்யோதிர்லிங்கம் என்பார்கள். லிங்கமே ஜோதிவடிவாகும். இந்த லிங்கோத்பவம் நிகழ்வு சிவராத்திரியின் போது நிகழ்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. ஆகவே சிவராத்திரியின் மூன்றாவது காலம் லிங்கோத்பவ காலம் என வழிபாடுகள் நடக்கும்.

ஒளித்தூணாக நின்ற ஈசனின் அடி, முடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் சென்று அவற்றை அவர்களால் காணமுடியவில்லை என்ற கதையை நாம் நன்கறிவோம். அந்த நிகழ்வு நடந்த இடம் திருவண்ணாமலை ஆகும். ஈசனின் இந்த ஜோதிவடிவே ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் திருக் கார்த்திகை தீபமாக வழிபடப் படுகிறது. அதை நினைவூட்டவே அன்று மலைமேல் தீபமும் ஏற்றப் படுகிறது. திருவண்ணாமலைக் கோயிலின் இரண்டாம் பிரஹாரத்தில் இதை நினைவூட்டும் வண்ணம் ஒரு சந்நிதி கோயிலாக விளங்குகிறது. ஐயனும், அம்பிகையும் ரிஷபவாகனத்தில் அமர்ந்திருக்க பின்னால் தீபச்சுடர் ஒளிவீச, உச்சியைக் காண முயலும் அன்னமான பிரம்மாவும், அடியைத் தேடும் வராஹமான விஷ்ணுவும் காணமுடியும்.


திருஞானசம்பந்தரின் திருவண்ணாமலைத் தேவாரத்தின் கீழ்க்கண்ட பதிகம் பிரம்மாவும், விஷ்ணுவும் அடி முடி தேடிச் சென்றதையும் அம்மை இடப்பாகம் கொண்டதையும் சொல்கிறது.

பாடல் எண் : 9
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.

பொழிப்புரை :
விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.

லிங்கோத்பவர் தொடருவார்.

No comments: