எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 16, 2011

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, உமா மகேசர்!

திரு உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ளதலம் எனத் தவறாய்க் குறிப்பிட்டுவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும். முன் காலத்தில் இந்த ஊர் கல்யாணபுரம் என்ற பெயரில் அழைக்கப் பட்டிருந்திருக்கிறது. இந்த ஊருக்குக் கல்யாணபுரம் என்ற பெயர் வந்ததற்குக் காரணமாய் அம்பிகை வேதியர் குடும்பத்தில் பிறந்து மங்களநாயகி என்ற பெயரோடு வளர்ந்து ஈசனைத் திருமணம் செய்துகொண்டதால் ஈசன் இந்த ஊர் கல்யாணபுரம் என அழைக்கப் படும் எனத் திருவாய் மலர்ந்தருளியதாய் ஒரு கூற்று. ஆனால் தற்காலத்தில் இந்த ஊரானது உத்தரகோசமங்கை என்று அழைக்கப் படுகிறது. மங்கையாகிய பார்வதி தேவிக்கு அவள் கேட்ட கேள்விகளின் மூலம் மகத்தானதொரு ரகசியமான பிரணவப்பொருளை ஈசன் உபதேசித்ததால் இந்தப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவார்கள். மாணிக்க வாசகர் தமது திருவாசகத்தில் உத்தரகோசமங்கையின் ஈசனைக் குறித்துத் தமது நீத்தல் விண்ணப்பத்தில் குறிப்பிடுகிறார். இந்த ஊரில் மாணிக்கவாசகருக்கெனத் தனிச் சந்நிதி இருப்பதாயும் கேள்விப் படுகிறோம். இங்கே கட்டுமலை அமைப்பில் கோயில் இருப்பதாயும், அந்தக் கட்டுமலையில், ஈசன் மடியில் அம்பிகை அமர்ந்திருக்கும் கோலத்தில் அம்பிகையை அணைத்தவண்ணம், சின் முத்திரை காட்டி அம்பிகைக்கு உபதேசிக்கும் கோலத்தில் ஐயன் காணப்படுவார் எனவும் கூறுகின்றனர். முதன்முதல் இந்தப் பிரணவப் பொருளை உபதேசம் பெற்றது அம்பிகையே ஆவாள். அவளே குருவாக இருந்து தனது அருள் பார்வையால் அனைத்து ஆன்மாக்களுக்கும் இவற்றை உணர்த்தினாள் என்பது ஆன்றோர் வாக்கு. சைவ மரபின் முதல் ஏழுகுருமார்களில் அம்பிகையும் ஒரு குருவாகக் கருதப் படுகின்றாள். //

அடுத்து உமாமகேசர். எப்போதும் அம்பிகையைப் பிரியாமல் தன்னுடனேயே வைத்திருக்கும் ஈசன். இமவானுக்கும் அவன் மனைவி மேனைக்கும் மகளாய்ப் பிறந்து வளர்ந்தாள் அம்பிகை. அவள் தோன்றும்போது ஆயிரத்தெட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலரின் மீது தோன்றினாள். அந்தக் குழந்தையைத் தன் மனைவியிடம் கொடுத்து பார்வதி என்ற பெயரில் வளர்ந்த குமாரியானவள் ஈசனையே திருமணம் செய்து கொள்ளப் போவதாயும், அதற்காகத் தவம் செய்யப் போவதாயும் கூறித் தந்தையின் உதவியோடு பர்ணசாலை அமைத்துக் கடுந்தவம் இருக்க ஆரம்பித்தாள். இங்கே ஈசனோ கடும் யோகத்தில் யோகாசன மூர்த்தியாக அமர்ந்திருந்தார். அவரை நெருங்க முடியவில்லை. ஈசனிடம் வரம் வாங்கிக்கொண்ட சூரபத்மன் என்னும் அசுரனோ தன்னுடைய வரங்களின் மகிமை இருக்கும் வரை தன்னை எவராலும் எதுவும் செய்ய இயலாது என்று புரிந்து கொண்டு அட்டகாசம் புரிந்து வந்தான். தேவாதிதேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது தவித்தனர். ஈசனே தஞ்சம் என இருக்கும் நிலையில் அவரோ யோகத்தில் ஆழ்ந்துள்ளாரே. இவர் யோகத்தைக் கலைத்து மீண்டும் உலகில் அமைதியை ஏற்படுத்துவது எவ்வாறு? அதோடு ஈசன் யோகத்தில் இருக்கும் இந்நிலையில் உலகில் சிருஷ்டியில் பங்கம் ஏற்படலாயிற்று. அனைத்து உயிர்களையும் மாயையில் மறைத்துப் பின் அருள் காட்டி அனுகிரஹிக்கும் எம்பெருமான் அன்னை இல்லாமல் சக்தியை இழந்த நிலையில் இருக்கவே சிருஷ்டியில் குறைபாடுகள் ஏற்பட்டு விண்ணுலகிலும், மண்ணுலகிலும் இன்னும் அனைத்து ஜீவராசிகளிடமும் காமம் என்னும் சிற்றின்ப உணர்வே இல்லாமல் இயக்கமே இல்லாமல் இருந்தது.

ஈசன் தன் நிலைக்குத் திரும்பி சக்தியோடு ஐக்கியம் ஆனால் ஒழிய இந்நிலை மாற வாய்ப்பில்லை.அதோடு சிவசக்தி ஐக்கியத்தால் தோன்றப் போகும் குமாரனாலேயே சூரனுக்கு அழிவு என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். எல்லாவற்றுக்கும் ஈசனின் தவம் கலையவேண்டும். என்ன செய்யலாம்?? ஆஹா, இதோ ஒரு வழி! மன்மதனை அனுப்பலாம். அவனுடைய கணைகளுக்கு மயங்காதவர் உண்டோ? மன்மதனை அனுப்பத் தீர்மானித்தனர். மன்மதனோ பயந்தான்.

இந்நிலை மாறவேண்டுமெனில் சிவகுமாரன் உதயம் ஆகவேண்டும்.

No comments: