எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 19, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!

அஞ்சையும் அடக்கி ஆற்றலுடையனாய் அநேக காலம்
வஞ்ச மிள் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்களாகி விசையொரு பாயுங்கங்கை
செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!

திருநாவுக்கரசரின் இந்தப் பாடல் ஐம்புலன்களையும் அடக்கித் தவம் புரிந்து கங்கையை விண்ணிலிருந்து மண்ணுக்குக் கொண்டு வந்த பகீரதனின் எல்லையற்ற ஆற்றலையும் பகீரதனுக்காகப் பன்முகங்களுடன் விரைந்து வந்த கங்கையையும் திருச்சேறை என்னும் ஊரில் உள்ள ஈசன் தன் செஞ்சடையில் ஏற்று அருள் புரிந்ததாகப் பாடி இருக்கிறார். இந்தத் திருச்சேறையில் தான் ஸ்ரீருணவிமோசன லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதை அறிந்து பார்க்க வேண்டிச் சென்றோம். சென்ற சமயம் கோயிலில் குருக்கள் இல்லை. வரக் கொஞ்சம் நேரம் ஆகும் என்றதால் அரை மணி போல் காத்திருந்துவிட்டுத் திரும்பிவிட்டோம். கருவறையை லேசாய் மூடி இருந்தனர். அதில் உள்ள இடைவெளி மூலம் தரிசனம் செய்து கொண்டோம். சுயம்புலிங்கம் என்று சொன்னார்கள். மேலும் இந்தக் கோயிலில் துர்க்கைக்கு மூன்று சந்நிதிகள் காணப்பட்டன. இங்குள்ள பைரவரும் அப்பரால் பாடப்பட்டவர் என்றார்கள். பைரவரைக்குறித்த பாடல்,

“விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடுதமருங்கை
தரித்ததோர் கோலே கால பைரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!”

இவ்வண்ணம் பூமிக்கு வந்தாள் கங்கை. இமவானின் மூத்தமகளாகக் கருதப் படும் கங்கையைத் தன் சடையில் ஈசன் தாங்கிக்கொண்ட கோலமே ஸ்ரீகங்காதரர் ஆகும். கங்காதரரின் திருவுருவம் யோகபட்டத்தோடு, ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் விரிசடையில் ஆமை, மீன், முதலை போன்ற உயிரினங்களோடு கங்கையின் திருமுகம் காணப்படும் என்றும் ஈசனின் கரங்கள் மான், மழுவைத் தாங்கி, சின் முத்திரை காட்டிய வண்ணம் இன்னொரு கீழ்க் கை வரத முத்திரையும் காட்டிக்கொண்டு காட்சி அளிக்கும் என்று வர்ணிக்கப் படுகிறது. இந்தப் படம் கிடைக்கவில்லை. மீன்களோடு ஒரு படம் இருந்தது. அதையும் கூகிளில் தேடினேன். வரவில்லை. 

ஈசன் தன் செஞ்சடையில் இருந்து கங்கையை எடுத்து வெளியே விடும் வண்ணம் காட்சி அளிக்கும் திருவடிவங்களே பல ஆலயங்களிலும் காண முடியும். அருகே சற்றே முகத்தைத் திருப்பிய வண்ணம் எழிலார்ந்த கோலத்தில் அன்னையும், வணங்கிய நிலையில் பகீரதனும் காணப்படுவார்கள். நந்தி ஈசன் விடும் கங்கை நீரை வாங்கி உமிழும் கோலத்தில் காணப்படுவார். மிக அரிய சிற்பம் இது. இன்னும் காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில், புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களிலும் காணமுடியும். இதிலே காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் பலமுறை தரிசித்தும் சரியாய் நினைவில் இல்லை. அதேபோல் மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாளையும் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகின்றன.  ஆனால் கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலிலும், தாராசுரத்திலும், திருவிடைமருதூரிலும் இருப்பதாய்க்கேள்விப்படுகிறோம். அடுத்த முறை அங்கே செல்லுகையில் கட்டாயமாய்ப் பார்த்துப் படங்கள் எடுத்து வரவேண்டும். சிதம்பரத்தில் கங்கைக்குத் தனியே சந்நிதி உண்டு.


அடுத்து நாம் காணப் போவது நெடுநாளாகக் காண வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவர். பைரவர் ஈசனின் பல்வேறு வடிவங்களில் மிக முக்கியமானவர். இவரே கோயில்களின் பாதுகாப்புக்கும் உரிய கடவுள் ஆவார். ஈசன் கோயில்களை பைரவரே காத்து வருவதாக ஐதீகம். முன்காலங்களில் கோயில்களைப் பூட்டிச் சாவியை வெளிப் பிராஹாரத்தில் காணப்படும் பைரவர் சந்நிதியில் வைத்துவிடுவார்களாம். பைரவர் தன் வாகனம் ஆன நாயுடன் கோயிலைச் சுற்றி உலா வந்து கொண்டிருப்பார் என்றும் பலர் கண்களிலும் பட்டிருக்கிறார் என்றும் கூறுவார்கள். சிதம்பரத்தில் பைரவர் தனம் தருபவராக இருந்திருக்கிறார். தில்லை வாழ் அந்தணர்கள் தங்கள் பிழைப்புக்குப் பணமோ, பொருளோ இல்லாமல் வருந்த ஈசன் பைரவருக்கு ஆணை யிட ஒவ்வொரு நாளும் இரவில் பைரவர் பொற்காசுகளை நடராஜர் சந்நிதியில் வைத்து விடுவார் என்றும் அதைக் காலையில் அன்றாட வழிபாட்டுக்கு வரும் தீக்ஷிதர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வார்கள் என்றும் சிதம்பரம் வாழ் தீக்ஷிதர்கள் கூறுவார்கள். சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதிக்கு அருகேயே கீழ்ப்பக்கமாக பைரவருக்கும் தனி இடம் உண்டு. அவருக்கு அபிஷேஹமும் உண்டு. இங்கே பைரவருக்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர். இனி பைரவர் குறித்த செய்திகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம்.

No comments: