எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, June 30, 2012

பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோயில் 2


ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
பொழிப்புரை :

திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான் , அடியேனுக்குத் தாயாய் தந்தையாய் உடன்பிறந்த , சகோதர சகோதரியாராய் அமைந்து , மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாய் , அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாய்த் தேவர்களுக்கும் அன்பனாகிய சிவபெருமான் ஆவான் .

திருநாவுக்கரசர் திருப்பாதிரிப் புலியூர் தேவாரம்


வைகாசி விசாகத்தில் திருவிழா நடைபெறுகிறது.  பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவில் தேரோட்டமும் உண்டு.  தேரின் அகலம் அதிகம் என்பதால் அதைத் தெருவடைச்சான் நிகழ்வு என்கிறார்கள்.  இந்த வருஷத் தேரோட்டத்தில் தேர் அவ்வாறு இருந்ததா எனத் தெரியவில்லை.  மாசி மாதம் மஹா சிவராத்திரியன்றும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். கடலில் தீர்த்தவாரி நடைபெறும்.  அருகிலுள்ள தேவனாம்பட்டினத்துக்கு உற்சவர் எழுந்தருளி அருள் பாலிப்பார்.  பெளர்ணமி தினங்களில் பஞ்சப் பிராஹாரம் வலம் வருவார்கள்.  அப்பர் இங்கே அமர்ந்த வண்ணம் காட்சி கொடுக்கிறார்.

இது மிகப் பழமையான கோயில் என்பதற்கு இங்கிருக்கும் சப்தமாதாக்களே ஆதாரம் ஆகும். தேவார நால்வருக்கு முன்னரிருந்தே இந்தக் கோயில் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது.  இங்கு வழிபட்டால் உடல் சம்பந்தமான நோய் எதுவானாலும் தீர்ந்து போவதாகச் சொல்கின்றனர்.  ஸ்வாமி இங்கு கரங்களில் ஆயுதம் ஏதுமின்றிப் பாதிரி மலர்க்கொத்துக்களை ஏந்திய வண்ணம் காட்சி அளிக்கிறார்.  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரை, "அப்பரே" என அழைத்தது முதன்முதல் இந்தத் தலத்தில் என்று சொல்கின்றனர்.  அருணகிரிநாதரும் திருப்புகழில் இந்தத் தலத்தைக் குறித்த பாடல்கள் பாடியுள்ளார்.  இங்குள்ள விநாயகர் வலம்புரி விநாயகர். இவர் அம்பிகைக்கு தவம் செய்கையில் உதவியதால் கன்னி விநாயகர் என்ற பெயருடன் பாதிரி மலர்க்கொத்துக்களோடு காணப்படுகிறார்.

பாடல் எண் : 10

உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.
பொழிப்புரை :

ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தை உடைய சமணரும் , புத்தரும் எரிவினால் சொல் லும் உரைகளைக் கொள்ளாது , திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப் புலியூர் அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள் .
குறிப்புரை :

உரிந்த ... நோன்பர் - ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தையுடையவர் என்னும் சமணர் . எரிந்து சொன்ன உரை :- எரிவினாற்சொன்னார் .

திருஞானசம்பந்தர் திருப்பாதிரிப் புலியூர் தேவாரம்

No comments: