எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, June 05, 2012

நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அச்வாரூடர்!


இறைவனின் சேவையிலேயே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாணிக்க வாசகர் தம் சொந்த உடமைகள், மற்றும் அரசன் குதிரைகள் வாங்கக் கொடுத்திருந்த பொருள் அனைத்தையும் ஈசனின் திருப்பணிக்கே செலவு செய்தார்.  ஈசனுக்குக் கோயில் எழுப்பினார்.  ஆபரணங்கள் வாங்கிப் பூட்டி அழகு பார்த்தார். பாமாலைகள் பாடி மகிழ்ந்தார்.  உடன் வந்த  அரசனின் பணியாட்களும், வீரர்களும், அரச சேவையில் தாங்கள் வந்திருப்பதை மாணிக்கவாசகருக்குப் பல முறை நினைவூட்டினார்கள்.  அரசனின் கருவூலப் பொருளை எடுத்துச் செலவு செய்வதை ஆக்ஷேபித்தனர்.  ஆனால் மாணிக்க வாசகரோ தமக்குப் புதிதாய்க் கிடைத்த இந்தப் பேரின்பத்தைச் சற்றும் இழக்க விரும்பாதவராய் சிவானந்தப் பேரின்பத்திலேயே லயித்து அதிலேயே ஆழ்ந்திருந்தார். வீரர்கள் மதுரை திரும்பினார்கள்.  அரசனிடம் நடந்தவற்றைக் கூறினார்கள்.  மன்னனுக்கு மாணிக்கவாசகரின் இந்தச் செயலினால் கோபம் தலைக்கேறியது.  உடனே குதிரைப் படைகளோடு மதுரை வந்தடைய வேண்டும் என்ற ஆணையுடன் கூடிய முத்திரை ஓலையை அவருக்கு அனுப்பி வைத்தான்.

ஓலையைக் கண்ட மாணிக்கவாசகர் கலங்கிப் போனார்.  ஈசனிடம் முறையிட்டார்.  “என் செய்வேன்!” எனப் புலம்பினார்.  அப்போது அசரீரி மூலம் ஈசன், “மாணிக்கவாசகா! கலங்காதே, நீ மதுரை செல்வாயாக! ஆவணி மாதம் மூல நக்ஷத்திரத்தன்று குதிரைகள் மதுரைக்குவந்து சேரும்.” என்று கூறி மாணிக்கவாசகருக்கு ஆறுதல் கூறினார்.  மாணிக்கவாசகரும் அவ்வாறே செய்வதாய்க் கூறிக் கிளம்ப ஒரு மாணிக்கக் கல்லை அவரிடம் கொடுத்து மன்னனுக்கு நம்பிக்கை வரவேண்டி இந்தக் கல்லைப் பரிசாய்க் கொடுக்கும்படி கூறினார்.  மாணிக்கவாசகரும் அந்தக் கல்லைப் பெற்றுக் கொண்டு மதுரை திரும்பினார்.  அரசனிடம் அனைத்தையும் கூறி மாணிக்கக் கல்லையும் பரிசாய்க் கொடுக்க மன்னன் மனம் மகிழ்ந்தான்.  மாணிக்கவாசகர் தம்மை ஏமாற்றவில்லை என நினைத்து இன்புற்றான்.

ஆவணி மூலமும் நெருங்கிக் கொண்டிருந்தது.  மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் சந்தேகம்.  அதற்குள்ளாக எப்படிக் குதிரைகளைக் கொண்டு வர முடியும், இயலாது என நினைத்து மன்னனிடம் சென்று வாதவூரார் பொய் சொல்வதாகவும் குதிரைகள் வாங்கவே இல்லை என்றும், இவற்றைத் தாம் ஒற்றர் மூலம் உறுதி செய்து கொண்டதாகவும் சொல்ல, மன்னனும், தீர விசாரித்தபோது குதிரைகள் வாங்கக் கொடுத்த பொருள் அனைத்தும் கோயில் கட்டுவதில் செலவானதும், மாணிக்க வாசகர் கீழைக்கடற்கரைக்குச் செல்லவே இல்லை என்பதும் உறுதியாயிற்று.  அவரைத் தண்டிக்கவேண்டும் என நினைத்து வீரர்களை அழைத்து வைகையாற்று மணலில் நடு மதிய வெயிலில் நிறுத்திச் சுட்ட செங்கல்லை அவர் கைகளில் கொடுத்து நிற்கச் செய்தான்.  அனைத்தையும் தாங்கினார் மாணிக்கவாசகர்.  பின்னர் சிறையில் தள்ளிக் கொடுமைகள் செய்தான்.  எல்லாவற்றுக்கும் அவர் ஒரே பதிலாக, “ஈசா, ஆவணி மூல நாளில் வருவதாய்ச் சொன்னாயே?  வர மாட்டாயா?  குதிரைகள் வராதா? நீயும் பொய்யுரைத்தாயா?” என்று கேட்டுக் கேட்டுக் கண்ணீர் சிந்தி அழுதார். “சொன்னபடி குதிரைகள் வரும் “ என அசரீரி ஒலித்தது.

ஆவணி மூல நாளும் வந்தது.  பாண்டியன் அவை.  மன்னன் அரியணையில் அமர்ந்திருக்க, அன்றுதான் மாணிக்கவாசகர் குதிரைகளைக் கொண்டு வருவதாய்ச் சொன்ன நாள் என்பதை உணர்ந்து அது குறித்தும், மாணிக்கவாசகர் சிறையில் இருப்பது குறித்தும் அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு சேவகன் வந்து, அரசே, யாரோ பெரிய படைத்தளபதி போலும் இருக்கிறான். அரசன் போலும் இருக்கிறான்.  அவனுடைய பரிவாரங்களே பெரிதாக இருக்கின்றன.  அப்படிப்பட்ட ஒருவன் பல்லாயிரக்கணக்கான குதிரைகளை ஓட்டி வந்திருக்கிறான்.  நம் வாதவூரார் பெயரைச் சொல்லி அவர் தாம் இந்தக் குதிரைகளை வாங்கியதாகவும், பாண்டிய மன்னனின் குதிரைப்படைகளுக்கு எனச் சொன்னதாகவும், குதிரைகளைக் கயிறு மாற்றிக் கொடுக்கத் தானே நேரில் வந்திருப்பதாகவும் கூறுகிறான்.  தங்களை நேரில் சந்தித்தே ஆகவேண்டும் என்கின்றான்.” என்று கூறி வணங்கி நின்றனர்.

மன்னன் மனம் துடித்தது.  ஆஹா, நாம் தவறல்லோ செய்துவிட்டோம்.  மாபெரும் குதிரைப்படையே வந்து கொண்டிருக்க நாம் மாணிக்க வாசகரைச் சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்து விட்டோம். என எண்ணி வருந்திய மன்னன் உடனடியாக மாணிக்கவாசகரைச் சிறையிலிருந்து விடுவிக்கக் கட்டளையிட்டுவிட்டு, அந்தக் குதிரைப்படைத் தலைவனைச் சபைக்கு அழைத்தான்.  அவனுடைய வீரம் செறிந்த முகத்தையும், தோரணையையும், கம்பீரத்தையும் பார்த்ததுமே அசந்து போன பாண்டியன், அவனையே குதிரைகளை நடத்திக் காட்டிவிட்டுப் பின்னர் கயிறு மாற்றிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டான். குதிரைகளைப் பழக்குபவர்கள் அவற்றை ஐந்து விதமான நடைகளில் ஐந்து நிலைகளில் நடக்கும்படிப் பழக்கி இருப்பார்கள்.  அந்த ஐந்து நிலைகளையும் நடத்திக்காட்டினார் ஈசன்.  மன்னனுக்கு மிகவும் மகிழ்ச்சி.  வந்தவனுக்குப் பல பரிசுப் பொருட்களை அளித்தான்.

No comments: