எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, April 19, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், ப்ரணய கலஹம், மட்டையடி உற்சவம்


நாச்சியாருக்காக இப்போது பண்டாரிகள் பேசுவார்கள். முதல்லே என்னோட தமிழில்.  அப்புறமா நாச்சியாரின் ப்ரகாரம்.

"என்ன< எப்போதும் போல் தாம் எழுந்தருளியுள்ளீர்களா?  யார் சொன்னது? அது உண்மையெனில் தங்கள் திருக்கண்கள் ஏன் இப்படி சிவந்து காணப்படுகின்றன? இரவு முழுவதும் தூங்காதவர் போல் அல்லவோ காணப்படுகிறீர்கள்?  மேலும் தங்கள் குழல் கற்றைகள்?  அவை காற்றில் பிரிந்தனவாய்த் தெரியவில்லையே? ஏன் இப்படி கலைந்து பிரிந்து தொங்குகின்றன?  நெற்றியைப் பாருங்கள்!  கஸ்தூரித் திலகம், திருமண் காப்பு கரைந்து வழிந்திருப்பதைப் பார்க்க முடிகிறதே!  அதோடு மட்டுமா?  தங்கள் உதடுகள் ஏன் இப்படி வெளுத்துக் காண்கின்றன!  ஸ்வாமி, இதோ இங்கே தங்கள் கழுத்தில் நகச் சின்னங்களாய்க் காண்கின்றேனே! இவை பொய்யா?  உங்கள் திருமேனியில் எல்லாம் குங்குமமாய்க் காண முடிகிறது எங்கனம்? பரிவட்டங்கள் எப்போது மஞ்சள் வர்ணத்தைப் பெற்றன?"

"ஆஹா, இதென்ன ஆச்சரியம்?  பெண்கள் போட்டுக்கொள்ளும் செம்பஞ்சுக் குழம்பின் சுவடுகள் தங்கள் திருப்பாதங்களில்! ஐயா என் உள்ளம் மிகவும் கலங்கி நான் குழம்பிப் போயிருக்கிறேன். யாரங்கே?  திருச்சேவடிமார்களே, உள்ளே இருக்கிறவர்களை வெளியே விடவும் வேண்டாம்.  வெளியே இருந்து வருகின்றவர்களை உள்ளே விடவும் வேண்டாம்.  கட்டுப்பாடு செய்யுங்கள்.  விண்ணப்பம் செய்கிறவர்களை அநுமதிக்க வேண்டாம்.  வந்திருப்பது யாராய் இருந்தாலும் நம் பெருமாளாகவே இருந்தாலும், அழகிய மணவாளனாகவே இருந்தாலும் அவரை நேற்றைக்கு எழுந்தருளி இருந்த இடத்திலேயே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லுங்கள்.  இது என் ஆணை!"

மேற்கண்டவாறு நாச்சியார் கூறியவுடனே மீண்டும் மலர்ப்பந்துகள், மாலைகள், வாழைப்பழங்கள் என நாச்சியார் சந்நதியிலிருந்து தூக்கி எறியப்பட நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் பயந்து பின் வாங்குவது போல் நடிப்பார்.  சற்றுத் தூரம் பல்லக்குப் பின்னோக்கிச் செல்லும்.  பின்னர் மீண்டும் முன் வந்து, தன் பதிலைச் சொல்லுவார்.  இப்போது நாச்சியாரின் ப்ரகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு நம்பெருமாளின் பதிலைப் பார்ப்போம்.

நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம் பண்டாரிகள் வாய்மொழியாக:

தாம் எப்போதும்போல் எழுந்தருளியது மெய்யானால் திருக்கண்களெல்லாம் சிவந்து இருப்பானேன்?  திருக்குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன்?  கஸ்தூரி திருமண்காப்பு கரைந்திருப்பானேன்? திருவதரம் வெளுத்திருப்பானேன்? திருக்கழுத்தெல்லாம் நகச்சின்னங்களாக இருப்பானேன்?  திருமேனியெல்லாம் குங்குமப் பொடியாக இருப்பானேன்? திருப்பரிவட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாய் இருப்பானேன்?  திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக் குழம்பாயிருப்பானேன்?  இப்படிப்பட்ட அடையாளங்களைப் பார்த்து நாச்சியாரின் திருவுள்ளம் மிகவும் கலங்கி இருக்கிறது.  ஆகையினாலே உள்ளே இருக்கிறவர்களை வெளியே விடவேண்டாமென்றும், வெளியிலே இருக்கிறவர்களை உள்ளே விடவேண்டாமென்றும் இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற சமயத்திலே உள்ளே விண்ணப்பஞ்ச்செய்யச் சமயமில்லை.  ஆனபடியினாலே நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

இதற்கு பதில் கொடுக்கும் நம்பெருமாள் சாதாரணமானவரா!  மஹா கள்ளனாயிற்றே. ஒவ்வொன்றுக்கும் எப்படிப் பதில் கொடுக்கிறார் பாருங்கள்.

"ஆஹா, ரங்க நாயகி, நம்மை யாரென நினைத்தாய்?  நாம் செங்கோலுடைய  திருவரங்கச் செல்வர் அன்றோ!  கவரி முடிந்தோம்;  கலிக்கச்சை கட்டினோம்;  வல்லயம் ஏந்தினோம்.  நம் குதிரை நம்பிரான் மேலே இரவு முழுதும் உறக்கமின்றி இவ்வுலகைக் காக்கும் நிமித்தமாக விழித்திருந்தபடியாலே நம் கண்கள் சிவந்து போயின.  அங்கும் இங்கும் அலைந்து திரிந்த சமயத்திலே அடித்த காற்றிலே திருக்குழல் கற்றைகள் கலைந்து பிரிந்து போயிற்று.  கஸ்தூரித் திருமண் காப்புக் கலைவது ஒன்றும் புதிதல்லவே.  இந்த சூரியனின் அதி கொடூரமான கிரணங்கள் எனக்கு ஒத்துக்கொள்ளாது என்பதை நீ அறியாதவள் அல்லவே! அந்தக் கொடூரமான சூரிய கிரணங்களினால் என் திருமண் காப்புக் கரைந்துவிட்டது. "

"தேவதைகளின் வேண்டுகோளுக்காக வேண்டி சங்க வாத்தியத்தை எடுத்து ஊதிய காரணத்தால் அதரங்கள் வெளுத்தன. இந்த ஜகத்தை ரக்ஷகம் செய்யும் வேலை சாமானியமானதா ரங்கநாயகி?  காடு மேடுகளெல்லாம் சென்று பார்க்க வேண்டாமா?  அவ்விதம் காடுகளெல்லாம் சுற்றி அலைந்த காரணத்தால் ஆங்காங்கே இருந்த முட்செடிகள் கீறிவிட்டதால் கழுத்தெல்லாம் கீறல்களாய்த் தெரிகிறது.  தேவதைகள் மிகவும் சந்தோஷம் கொண்டு என்னைப் புஷ்பங்களால் வர்ஷித்தன.  அப்படி வர்ஷிக்கையிலே அந்தப் புஷ்பங்களின் மகரந்த வர்ணச் சேர்க்கையெல்லாம் என் மேல் விழுந்ததால் குங்குமப் பொடியாக உனக்குத் தெரிகிறது.  ஆஹா, என் பரிவட்டம் உன் கண்ணுக்குப் பீதாம்பரமாய்த் தெரிகிறது போலும்.  என் பீதாம்பரம் தானே மஞ்சள் வர்ணம்.  அதைப் பரிவட்டம் என நினைத்துவிட்டாயோ?  குதிரை மேல் ஏறி இரவு முழுதும் அலைந்த சமயம் குதிரையின் அங்கவடியின் மேலே கால்களை வைத்துக் கொண்டே செல்ல வேண்டுமே!  அப்போது திருவடிகள் சிவக்காதிருக்குமா?  இவைதான் ரங்கா, வேறெதுவுமே இல்லை."

"ஆனால் நான் ஏன் இவ்வளவு தாமதமாய் வந்தேன் என நினைக்கிறாயா?  அதற்குக் காரணம் உள்ளது!"

7 comments:

வல்லிசிம்ஹன் said...

சரியான் களவர். அகப்பட்டுக் ஒண்டாலும் வார்த்தையாடும் அழகைப் பாருங்களேன். கீதா வெகு ஸ்வாரஸ்யமான இடத்தில் நிறுத்திவிட்டீர்களே:)

திண்டுக்கல் தனபாலன் said...

கள்ளன் நன்றாகவே பதில் கொடுத்துள்ளரென்று சொல்லவா வேண்டும்...!

ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

கேள்வியும் பதிலக்ளும் அருமை ...

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, கள்ளன் மட்டுமா? படு சாமர்த்தியசாலியும் கூட அல்லவோ! :))))

Geetha Sambasivam said...

வாங்க டிடி, அவனுக்கென்ன பேசக் கேட்கவா வேண்டும்! :)))

Geetha Sambasivam said...

வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.

ADHI VENKAT said...

ஆஹா! என்ன வார்த்தை ஜாலம்! சமாளிப்பு!