எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 28, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கமாநகருள்!

டில்லிப் பரிவாரங்களின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டு வரவே வேதாந்த தேசிகர் அங்கே கிடந்த உடல்களுக்கு அடியில் தாமும் படுத்துக் கொண்டு அந்தக் குழந்தைகளையும் படுக்க வைத்து சப்தம் போடாமல் இருக்கச் சொன்னார். வீரர்களுடன் உல்லூக்கானும் ஆவேசத்துடன் வந்து கொண்டிருந்தான். கண்ணில் பட்ட ஶ்ரீரங்கத்து மனிதர்கள் எல்லாம் அவன் வீரர்களால் கொல்லப்பட்டும், அவன் திருப்தி அடைந்ததாய்த் தெரியவில்லை. கோயில் சிற்பங்களை  உடைக்கவும், பிராகாரங்களின் தளங்களைத் தோண்டிப் பார்க்கவும் கட்டளை இட்டான். பதுங்கி இருப்பவர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க உத்தரவிட்டான். கோயிலின் அனைத்துப் பொன்னும், மணியும், ரத்தினங்களும் மற்றப் பொருட்களும் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பேராசை அவனுக்கு.

அப்போது கோயீலின் அடியார் கூட்டத்தில் ஒரு கூட்டமாக இருந்து வந்த நாட்டியம் ஆடும் காரிகைகள் இவர்களை எப்படியேனும் திசை திருப்ப வேண்டும் என்னும் எண்ணத்தோடு தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு ஆடல், பாடல்கள் எனப் பல்வேறு விதமான காரியங்களைச் செய்து கொண்டு அங்கே கூட்டமாக வந்தனர். அவர்கள் முகத்தின் காந்தியும், அவர்கள் வரும்போது முன்னே எழுந்த சந்தன மணமும், ஆடை , ஆபரணங்களின் நேர்த்தியும், பாடல்களுக்கும், தாளங்களுக்கும் ஏற்ப அனைவரும் தாமரை போன்ற தங்கள் பாதங்களைத் தரையில் வைத்துக் கைகளால் அபிநயம் பிடித்தவாறு வந்த நேர்த்தியும் அனைவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது அவர்களின் வளையல்களிலிருந்து எழுந்த கிண்கிணிச் சப்தமும், காலின் சலங்கைகள் எழுப்பிய கலீர் கலீர் என்னும் ஒலியும் அந்தப் பிராந்தியத்தில் அதுவரை நிலவியிருந்த பேரமைதியைக் கலைத்தது.

அவர்களில் எவரும் இந்த முகமதியப் படைவீரர்களைக் கண்டு பயந்ததாகத் தெரியவில்லை மாறாக உல்லூக்கானுக்கு நேர் எதிரே அனைவரும் நின்று கொண்டு பாடல்கள் பாடுவோர் தேனினும் இனிய குரலில் பாடல்களைப் பாட ஆடத் தெரிந்தவர்கள் மிகவும் தைரியமாக ஆடவும் தொடங்கினார்கள். எப்படியேனும் இவர்களை மயக்கியே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தோடு ஒரு நாட்டிய நங்கை உல்லூக்கானைப் பார்த்துச் சிரித்த வண்ணம் தன் கைகளை நீட்டி அழைக்க உல்லூக்கானோ அந்தக் கரங்களை வெட்டும் நோக்கோடு வாளைப் பாய்ச்சினான். ஆனால் அந்தப் பெண் நல்லவேளையாக நகர்ந்து விட்டாள். இல்லை எனில் அவள் கரங்கள்  துண்டாடப்பட்டிருக்கும். என்றாலும் வாளின் நுனி பட்டு ஒரு கரத்தில் ஆழமான காயமும், வலியும் ஏற்பட்டு விட்டது அந்தப் பெண்ணுக்கு.  ரத்தம் கொட்டத் தொடங்கியது.

ஆனாலும் பாடுபவர்கள் பாடலை நிறுத்தவில்லை. ஆடிக் கொண்டிருந்த மற்றவர்களும் ஆட்டத்தை நிறுத்தவில்லை. வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களை துரித கதியில் வாசிக்கத் தொடங்க ஆடுபவர்களும் அந்த வேகத்துக்கு ஏற்ப ஆடத் தொடங்க. ரத்தம் கொட்டும் கையுடன்  அந்தப் பெண்ணும் ஆடத் தொடங்கினாள்.  அதைப் பார்த்த உல்லூக்கான் கோபத்துடன் ஆட்டத்தை நிறுத்தச் சொல்லிக் கட்டளை இட்டான். ஆட்டமும் நிற்க, காயம்பட்ட பெண்ணை மட்டும் உல்லூக்கான் தனியாக அழைத்தான். அந்தப் பெண் சிறிதும் கலங்காமல் உல்லூக்கானை நோக்கி வந்தாள். அருகில் வந்த அந்தப் பெண்ணை உல்லூக்கான் கடுமையாகக் கடிந்து கொள்ள, அதை ஹொய்சள வீரன் ஒருவன் அவளுக்கு மொழி பெயர்த்துச் சொன்னான். ஆனால் அந்தப் பெண் சிறிதும் கலங்காமல் உல்லூக்கானைப் புகழ்மாரி பொழிந்து பேசினாள்.


தகவல் உதவி: திருவரங்கன் உலா, ஶ்ரீவேணுகோபாலன், மற்றும் ஶ்ரீரங்க பங்கஜம்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

மனசைச் சிலிர்க்கவைக்கும் வரலாற்று நிகழ்ச்சிகள். படிக்கும்போதே பதைக்க வைக்கிறது. நடந்த பொது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

RajalakshmiParamasivam said...

திருவரங்கன் உலா படிக்க சுவாரஸ்யம். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பது இது தான் என்றுப் புரிகிறது.