எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, October 25, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

வந்த வீரர்கள் மச்சக்காரனையும் அவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த குலசேகரனையும் பார்த்துத் தயங்கி  நின்றார்கள். மச்சக்காரன் அவர்களை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டுவிட்டு இவர்களை எல்லாம் விட்டு விடு, இவர்களுக்கும் அரங்கனுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினான். அவன் குரலின் கண்டிப்பைக் கண்ட தில்லி வீரர்கள் தலைவன் அரை மனதோடு அதற்குச் சம்மதித்தாலும் மச்சக்காரனின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு கொஞ்சம் சந்தேகம் அடைந்தான். அதற்கு மச்சக்காரன் காட்டு வழியில் வந்தபோது திருடர்கள் அடித்துவிட்டதாய்க் கூறினான். குதிரை வீரர்களிடம் திட்டவட்டமாக இந்தக் கூட்டத்தினரைத் தொந்திரவு செய்யாமல் போக விடு என்றும் கூறினான். அவர்கள் அகன்றனர்.

குலசேகரன் மச்சக்காரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றி கூறினான். குலசேகரனிடம் அவர்களில் ஒருவர் பேசியதை வைத்துத் தான் விஷயத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறிய மச்சக்காரன் அரங்கனைக் காப்பாற்ற வேண்டியே அவர்கள் இப்படி மறைமுகமாகத் தன்னை வேண்டி இருக்கிறார்கள் என்பதையும் தான் புரிந்து கொண்டதாய்த் தெரிவித்தான். அதனால் அவர்கள் தப்பிச் செல்லத் தான் அனுமதி கொடுக்கச் சொன்னதாயும் கூறினான். மேலும் அரங்கனை இவர்களிடமிருந்து காப்பாற்றத் தான் ஓர் காரணமாக அமைந்தது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டான்.

அரங்கன் ஊர்வலத்தார் பலரும் குலசேகரன் இருக்குமிடம் தெரிந்து கொண்டு அங்கே வந்து அவனையும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். அதற்குக் குலசேகரன் மறுக்க அவர்கள் சொன்ன சமாதானங்களையும் ஏற்க மறுக்க மச்சக்காரன் அவனை ஒத்துக் கொள்ளச் சொன்னான். ஆனால் குலசேகரனோ மச்சக்காரன் இல்லாமல் தான் பயணம் செய்யப் போவதில்லை என்று சொல்லிவிட்டான். கூட்டத்தினர் மச்சக்காரனையும் உடன் அழைத்துச் செல்வதாக உறுதி கூறிக் குலசேகரனை மீண்டும் வற்புறுத்தக் குலசேகரனும் மனம் இசைந்தான். குதிரை மீது மச்சக்காரனைக் குப்புறப் படுக்க வைத்துத் தான் கவனமாகக் குதிரையை ஓட்டியவண்ணம் உடன் சென்றான் குலசேகரன்.

சிறிது நாழிகையில் அவர்கள் வேட்டுவக்குடியை நெருங்கினார்கள். பூவரச மரங்கள் நிறைந்த தோப்பில் பரிவாரங்கள் அனைவரும் கூடி இருந்து மச்சக்காரனையும் குலசேகரனையும் வரவேற்றனர். மச்சக்காரன் படுத்திருந்த குதிரையை அரங்கனின் பல்லக்குக்கு அருகே இழுத்துச் சென்றான் குலசேகரன். மாலை நேர வழிபாட்டுக்கான நேரம்! திரை திறக்கப்பட்டு அரங்கனாகிய அழகிய மணவாளர் திவ்ய தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட குலசேகரன் மச்சக்காரனை எழுப்பி அரங்கனைத் தரிசனம் செய்யச் சொன்னான். மச்சக்காரனிடமிருந்து பதிலே வராமல் போகத் திடுக்கிட்ட குலசேகரன் அவனை உலுக்கி எழுப்ப அவன் உடல் குதிரையிலிருந்து கீழே விழுந்தது.

குலசேகரன் மண்ணில் அந்த உடல் விழுவதற்குள்ளாகத் தன் கைகளில் பிடித்து மெல்லக் கீழே கிடத்தினான். மச்சக்காரன் முகத்தில் புன்னகை மறையவே இல்லை! அரங்கனைப் பார்க்கப் போகிறோம் என்னும் மகிழ்ச்சியில் எழுந்த அந்தப் புன்னகை மறையாமலேயே அவன் மறைந்து விட்டான். குலசேகரன் அவனை உலுக்கு உலுக்கென்று உலுக்கியும் அவன் கண் திறக்கவில்லை.  பெரிதாக ஓவென்று அலறி அழுதான் குலசேகரன். அவன் அலறலைக் கேட்ட குதிரையும் கனைத்தது அதுவும் அழுவது போல் தோன்றியது.குலசேகரனுக்குக் கோபம் வந்தது.

கூட்டத்தினரைப் பார்த்துக் கோபத்துடன், "ஒரு உயிர் அநியாயமாகப் போய்விட்டது.அரங்கன் மீது முழு விசுவாசமும் பக்தியும் கொண்டிருந்த ஓர் உயிர்! இவருடைய வெளி வேஷத்தைப் பார்த்து நீங்கள் இவரை இகழ்ந்தீர்கள்! இவருடைய உள் மனதை யாரும் பார்க்கவில்லை! அரங்கன் மீது இவர் கொண்டிருந்த அபாரமான காதல் காரணமாகவே இன்று நீங்களும் சரி, அரங்கனும் சரி பாதுகாக்கப் பட்டிருக்கிறீர்கள். இவர் இல்லை எனில் தில்லித் துருக்கர்கள் உங்களை எல்லாம் கொன்று போட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிச் சென்றிருப்பார்கள். உண்மையில் இவர் தான் அரங்கனின் உண்மையான பக்தர்! நீங்களோ நானோ அல்ல!" என்றான்.

அப்போது அங்கே குறளன் என்பவன் முன்னே வந்து குலசேகரனிடம் மன்னிப்புக் கேட்கக் குலசேகரனின் கோபம் மேலும் பொங்கியது. குறளனின் அடியால் தான் அவர் முதுகு பிளந்து கடந்த மூன்று நாட்களாகத் துடித்ததைக் குலசேகரனால் மறக்க முடியவில்லை. அப்படி இருந்தும் அரங்கனையும் அவர் பக்தர்களையும் மச்சக்காரப் பெரியவர் காட்டிக் கொடுக்கவில்லை என்பதை நினைத்து அவன் மனம் நன்றியில் நிறைந்தது. எனினும் குறளனின் மேல் கோபம் தணியவில்லை. அப்போது குறளன் தாய் செய்ததுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். தான் செய்த செயலுக்கான தண்டனையும் தனக்குக் கிடைத்ததாகக் கூறித் தன் முதுகில் தில்லித் துருக்கர்கள் கொடுத்திருந்த சாட்டை அடிகளைக் காட்டினான்.

என்றாலும் மச்சக்காரர் இறக்கும் முன்னர் அரங்கனைப் பார்த்திருந்தால் ஒருக்கால் பிழைத்திருப்பாரோ என்னும் எண்ணம் குலசேகரனுக்குள் தோன்றியது. மச்சக்காரருக்குத் தான் கொடுத்த அடிகள் தான் தமக்குத் திரும்பி வந்ததாகக் குறளன் கூறியதில் குலசேகரனுக்குக் கொஞ்சம் வருத்தமும் அதே சமயம் இனம் புரியா ஆறுதலும் ஏற்பட்டது. மச்சக்காரர் உண்மையில் மகான் தான்! அதான் உடனடியாகக் குறளனுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் சமயம் பிள்ளை உலகாரியர் அழைப்பதாகப் பரிசனங்களில் ஒருவர் வந்து குலசேகரனை அழைத்தார்!

No comments: