எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 01, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஹேமலேகாவைக் குறைந்த நேரமே சந்தித்த குலசேகரனுக்கு அவள் எப்படி இருப்பாள் என்பதே நினைவில் இல்லை. அந்த நினைவில் அவன் வாசந்திகாவைப் பார்க்க வாசந்திகாவோ அவன் தன் மேல் காதல் கொண்டிருக்கிறான் என்னும் குதூகல நினைவில் மூழ்கினாள்.  குலசேகரனுடன் ஆனந்தப் பேச்சு வார்த்தையும் மூழ்க நினைத்த வாசந்திகாவுக்கு ஏமாற்றமே மேலிட்டது. குலசேகரன் முழுவதும் தன் நினைவில் வந்து விட்டான். தான் மேற்கொண்டிருக்கும் முக்கியமான காரியத்தைக் குறித்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். மேம்போக்காக வாசந்திகா கேட்டவற்றுக்குப் பதில்களை அளித்தான். வாசந்திகாவோ அங்கே கிடந்த ஓர் பாறையை அரங்கனாகவும் அரங்கன் பாம்பணை மேல் படுத்திருக்கும் கோலமாகவும் எண்ணிக் கொண்டு நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றைப் பாடிக் கொண்டு ஆடவும் ஆரம்பித்தாள்.

பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்

காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்

சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும்,

நீதியாய்! நிற்சார்ந்து நின்று.

குலசேகரனின் நொந்த மனதுக்குப் பாசுரமும் அதன் பொருளும் அவள் பிடித்த அபிநயங்களும் ஆறுதலை அளித்தன. அவன் முகத்தைக் கண்ட வாசந்திகாவும் அவன் உண்மையில் தன் மேல் காதல் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடனேயே விடைபெற்றுச் சென்றாள். மறுநாள் அனைவரும் புறப்படுவதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த வேளையில் பிள்ளை உலகாரியரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்குப் போய் விட்டிருந்தது. தொண்டர்களும் பரிசனங்களும் அழுது புலம்பிக் கொண்டு அவரின் கூடாரத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். பலவாறு சொல்லிப் பிரலாபித்தார்கள்.

இப்போது பிள்ளை உலகாரியரின் தாய், தந்தை குறித்து ஓர் சிறிய குறிப்பு.  வைணவ ஆசிரியப் பெருந்தகைகளில் ஒருவரான "நம்பிள்ளை" என்பாருக்கு "வடக்குத் திருவீதிப் பிள்ளை" என்றொரு சீடர் இருந்தார். அவர் திருமணம் ஆகியும் மனைவி மேல் பற்றில்லாமல் துறவி போல் பிரமசரிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். அதைக் கண்ட அவர் தாய்க்கு வருத்தம் மேலிட அவர் தம் பிள்ளையின் ஆசிரியரான நம்பிள்ளையை அணுகி நிலைமையைச் சொல்லிப் புலம்பினார். தம் குலம் தழைக்க வேண்டும் என்ற ஆசையினைப் பகிர்ந்து கொண்டார். மகன் இப்படித் தன் மனைவியைப் பாராமுகமாக இருப்பதை எண்ணி வருந்தினார்.

நம்பிள்ளை அவரைச் சமாதானம் செய்து அவர் மருமகளை அழைத்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லி ஆசிர்வாதங்கள் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் தம் சீடரான திருவீதிப்பிள்ளையை அழைத்து அவரைத் தம் மனைவியுடன் அன்றிரவு மட்டும் சுகித்து இருக்கும்படி சொல்லி, இது குருவின் கட்டளை என்றும் தெளிவு செய்து அனுப்பி வைத்தார். குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்டு திருவீதிப் பிள்ளை அன்றிரவு தன் மனைவியுடன் சுகித்திருந்தார். அதன் விளைவாகப் பிறந்தவரே பிள்ளை உலகாரியர் என்பார்கள்.

இந்தக் கதை நடந்து வந்த சமயம் பிள்ளை உலகாரியருக்குப் பிராயம் அறுபதை நெருங்கி கொண்டிருந்தது. வைணவ சமயத்தை நிலை நிறுத்த வேண்டி "பதினெட்டு ரகசியங்கள்" என்னும் நூலை எழுதி இருந்தார். அவற்றுள் சூத்திரங்களாக உள்ள "ஶ்ரீ வசன பூஷணம்" என்னும் நூலுக்குப் பலரும் வியாக்கியானங்கள் எழுதி இருப்பதோடு இன்னமும் எழுதியும் வருகின்றனர். இவர் ஆரம்பத்தில் இருந்தே பிரமசரியத்தில் ஈடுபாடு கொண்டதால் திருமணமே செய்து கொள்ளாமல் வழ்ந்து வந்தார். அரங்கன் சேவையையே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வந்த அவருக்குக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய குழப்பமான சூழ்நிலைகளால் உடல்நிலையும் மனோநிலையும் பரிபூரணமாகக் கெட்டுப் போயிருந்தது.

ஆழ்ந்த மன வருத்தத்தில் இருந்த அவர்  அரங்கனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செவ்வனே முடிக்க ஆசைப்பட்டார். அதை இப்போது தம்மால் நிறைவேற்ற முடியுமா என்னும் ஐயம் அவரைப் பிடித்து ஆட்டியது.  ஏற்கெனவே இருந்த பலவீனம், மனோவியாகூலம் எல்லாம் சேர்ந்து அவரை மயக்க நிலையில் தள்ளி இருந்தது.  அதைக் கண்ட அவர் சீடர்கள் மனம் வருந்தினார்கள். கூடாரத்திலிருந்து வெளியே வந்த அவர்களில் சிலர் தங்களுக்குள்ளாக ஆலோசனைகள் நடத்தினார்கள். ஆற்றங்கரையோரமாகத் தங்கி இருந்ததால் அந்தப் ப்ரதேசத்தில் அதிக நாட்கள் தங்கக் கூடாது என்பதால் ஓர் பல்லக்கை ஏற்பாடு செய்து பிள்ளை உலகாரியரை அதில் படுக்க வைத்துச் சுமந்து செல்லத் தீர்மானித்தார்கள். 

No comments: