எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, November 04, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

மறு நாள் காலையில் அவர்கள் தண்டு இறங்கி இருந்த இடத்தில் பிள்ளை உலகாரியரைப் பார்த்த அவருடைய அணுக்கத் தொண்டரான "விளாஞ்சோலைப் பிள்ளை" என்பார் உலகாரியரின் நிலையையும் திருவரங்கத்தை விட்டு வர நேர்ந்ததையும் அரங்கன் இப்படி ஊர் ஊராகச் சுற்ற வேண்டிய அவலநிலையையும் எண்ணி எண்ணி அழுதார். அதற்குப் பிள்ளை உலகாரியர்,"இதுவும் அரங்கன் லீலை" என்றே எண்ணிக் கொள்ள வேண்டும் என விளாஞ்சோலைப் பிள்ளைக்குச் சமாதானம் சொன்னார்.  இதைத் "திருவரங்கன் உலா"வாகக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். மேலும் அரங்கன் மேல் தீராத பக்தி கொண்டு அவனையே சரண் அடைந்தவர்களுக்கு அரங்கன் மேல் பக்தி ஒருக்காலும் குறையாது எனவும் எந்தத் துயரத்தையும் ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள் எனவும் அப்படி எண்ணினால் அவர்கள் ஆத்திகர்களே இல்லை. பொய்யான ஆத்திகம் பேசுபவர்கள் என்றும் கூறினார்.

அன்று அங்கே கழித்து விட்டு மறுநாள் காலையில் திருவரங்கன் உலா காட்டு வழியில் சென்ற போது ஒரு கள்ளர் கூட்டம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அவர்களிடம் பொன்னும், நகையும், பொருளும் இருக்குமெனச் சோதனை போட்ட கள்ளர் தலைவன் மூட்டைகளில் புஞ்சை தானியங்களும் பல்லக்கில் திருவரங்கன் எவ்விதமான ஆடை, ஆபரணங்களின் பகட்டில்லாமல் எளிமையாகக் காட்சி கொடுத்ததையும் பார்த்துத் திடுக்கிட்டான். பரிசனங்களை விசாரித்து நடந்தவற்றைத் தெரிந்து கொண்டான். திருவரங்கப் பெருமாளின் செல்வமும், செல்வாக்கும் குறித்து அறிந்திருந்த அவன் இப்போது மனம் வருந்திப் பின்னர் தன்னிடமுள்ள கொள்ளை அடித்த மூட்டைகளைப் பிரித்து காசு, பணம், நகைகள் என அள்ளி எடுத்து ஒரு தாம்பாளம் நிறைய வைத்து அதைப் பிள்ளை உலகாரியரிடம் நீட்டினான்.

பிள்ளை உலகாரியர் அவற்றை ஏற்க மறுத்தார். கொள்ளை அடித்துச் சேர்த்த பொருட்களைத் தாமும் தம் பரிசனங்களும், அரங்கனின் அடியார்களும் தொடமாட்டோம் என உறுதிபடக் கூறினார். பரிசனங்களுக்கு உணவு வழங்கத் தேவையான பொருளையாவது பெற்றுக்கொள்ளும்படி கள்வர் தலைவன் வேண்டியும் பிள்ளை உலகாரியர் பட்டினி கிடந்து மரித்தாலும் மரிப்போம். ஆனால் இந்தப் பொருட்களைத் தொட மாட்டோம். எனத் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். கள்வர் தலைவனிடம் உன் உண்மையான சொத்துக்களைக் கண்டடை என்று சொல்லிவிட்டு ஊர்வலம் மேலே நகர உத்தரவிட்டார் பிள்ளை உலகாரியர். தன் உண்மையான சொத்து எது எனக் கேட்ட கள்வர் தலைவனுக்கு அரங்கனின் நாமத்தைச் சொல்லும்படியும் அந்தச் சொத்து அவனுக்குத் தானாக வந்து சேரும் என்றும் கூறினார் பிள்ளை உலகாரியர்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்த குலசேகரனுக்கு இந்தக் கூட்டத்தில் வாசந்திகா இருக்கும் இடம் தெரியவில்லை. எங்கே இருப்பாள் என யோசித்த அவன் முன்னர் வந்து நின்றார் ஓர் ஊர்வலத்தார். தன் தலையில் பாகை கட்டிக் கொண்டு வந்து நின்ற அவரைப் பார்த்த குலசேகரன் யார் என யோசிப்பதற்குள்ளாக, கலகலவெனச் சிரிக்கும் சப்தம் கேட்டு உற்றுப் பார்க்க ஊர்வலத்தார் வேஷத்தில் வாசந்திகா நிற்பது புரிந்தது.  காட்டில் அனைவரிடமிருந்தும் தப்பிப்பதற்காகவும் தான் பெண் என்பது புரியாமல் இருப்பதற்காகவும் இந்த வேஷத்தில் வருவதாக வாசந்திகா சொல்ல அதை ஆமோதித்தான் குலசேகரன்.

அப்போது குலசேகரன் தன்னையும் மச்சக்காரரையும் பார்த்து வரும்படி திருக்கோஷ்டியூருக்கு அனுப்பியது வாசந்திகா தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டான். வாசந்திகாவும் அதை உறுதி செய்தாள். தில்லிப் படை வீரர்களிடமிருந்து தப்பிக்கும் வழிதெரியாமல் தான் அப்படிச் செய்ததாகவும் கூறினாள். மச்சக்காரரை எப்படி நம்ப முடிந்தது என்னும் கேள்விக்கு, குலசேகரன் அவருக்கு ஆதரவு காட்டியதில் இருந்து மச்சக்காரர் நல்லவர் என்னும் எண்ணம் தனக்கு வந்தது என்றும் சொன்னாள். மச்சக்காரரைக் காப்பாற்ற வேண்டி அரங்கன் ஊர்வலத்தையே துறந்து குலசேகரன் சென்றதையும் ஆகவே மச்சக்காரர் உண்மையிலே நல் மனம் கொண்டவர் தான் என்பது உறுதிப்பட்டதாகவும் கூறினாள்.

குலசேகரன் தன்னை விரட்டினாலும் தான் திரும்ப அவனை அழைத்துக் கொண்டதையும் குறளனைப் போல் சஞ்சலங்கள் தன்னிடம் இல்லை எனவும் கூறினாள்.  மேலும் குலசேகரனைப் போன்றவர்களுக்காகவும் அவர்களை எல்லாம் மகிழ்விக்கவுமே தான் அரங்கனுக்கு எதிரில் ஆடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள். அங்குள்ள மற்றக் கூட்டத்தாரை விடக் குலசேகரன் ஒருவன் தான் ஆடும் ஆட்டத்தின் காரணத்தையும் அரங்கனுக்காக மட்டுமின்றி அவனுக்காகவும் தான் ஆடுவதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் சொன்னாள் வாசந்திகா. 

No comments: