எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 02, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

பின்னர் பிள்ளை உலகாரியர் திருநாட்டிற்கு எழுந்தருளிய செய்தியையும், அரங்கனின் சொத்துக்கள் அனைத்தும் பறி போனதையும் கேள்விப் பட்டு சிங்கப்பிரான் மிகவும் வருந்தினார். அதோடு இல்லாமல் அரங்கனுடன் கூட வந்த இரு நாச்சியார்களும் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்பதை அறிந்தும் மனம் நொந்து போனார். அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் யோசனையில் ஆழ்ந்தார் சிங்கப் பிரான். பின்னர் ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு தம் விருத்தாந்தத்தைச் சொல்ல ஆரம்பித்தார். திருவரங்கத்தில் தண்டு இறங்கி இருக்கும் உப தளபதியை சுரமா என்னும் எம்பெருமானின் அடியாள் ஒருத்தி மூலமாக மயக்கிப் பல காரியங்களையும் சாதித்து வருவதாய்க் கூறினார். 

உபதளபதியை நன்கு மயக்கித் தன் சொல்லுக் கட்டுப்படும்படி சுரமா செய்து விட்டதாகவும் தான் பற்பல விதமான மருந்துகளை அவள் மூலம் கொடுத்து உபதளபதிக்கு உணவுடன் சேர்த்துக் கொடுக்கச் செய்ததாகவும் அதன் காரணமாக அவன் இப்போது நித்திய நோயாளியாக இருப்பதையும் கூறினார். ஆனால் குலசேகரனுக்கும், குறளனுக்கும் இதனால் என்ன பலன் என்பது புரியவில்லை. தளபதி பலவீனம் எனில் படைகளும் பலவீனம் அடையும் என்று சிங்கப்பிரான் கூறினார். படைகள் பலவீனம் ஆனால் அதன் மூலம் நமக்கு ஏதேனும் நன்மை பயக்கலாம் என்றும் சொன்னார். ஆனால் அதைத் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளும் தலைமை அல்லது மன்னன் மற்றும் அவன் பலம் நம்மிடம் இல்லையே என்று குலசேகரன் கூறினான். 

அப்போது சிங்கப்பிரான் ஹொய்சள மன்னர் வீர வல்லாளரைப் பற்றிக் கூறி அவர் உதவி கிடைக்கும் என்றும் கூறினார். உடனே குலசேகரனும், குறளனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து சிங்கப்பிரானைத் தழுவிக் கொண்டு தாங்களும் அவரையே நாடுவதற்கு நினைத்ததாகச் சொன்னார்கள். பாண்டியரோ, சோழரோ இனி நாட்டைக் காக்கப் போவதில்லை! அந்த சக்தி வீர வல்லாளரிடமே இருக்கிறது. என்று இருவரும் ஒரு சேரக் கூறினார்கள். ஆனால் உடனடியாக அவர் உதவி கிட்டுமா என சந்தேகப்பட்டார் சிங்கப்பிரான். ஏனெனில் தற்சமயம் வரை ஹொய்சள அரசு தில்லிக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டும் ஓர் அரசாகவே இருந்து வருவதைச் சுட்டிக் காட்டினார். அதற்குக் குலசேகரன் அவர் மூலம் தில்லிப்படைகளை திருவரங்கத்தை விட்டு விலகும்படி கேட்டுக் கொண்டால் அரங்கனை மீண்டும் இங்கேயே கொண்டு வரலாம் என்று யோசனை சொன்னான்.

அவர்களையே போய் ஹொய்சள மன்னரைப் பார்த்து வரும்படி அனுப்பி வைத்தார் சிங்கப்பிரான். அப்போது ஹொய்சளம் கர்நாடகத்தில் கொஞ்சமும் தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியிலுமாகப் பரவிக் கிடந்தது. தென் தமிழகத்தைக் கைப்பற்ற வந்த தில்லிப் படைகளுக்குப் பணிந்து வளைந்து கொடுத்து ஹொய்சளம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. ஹொய்சளத்தின் தலைநகரம் துவார சமுத்திரம் என்னும் ஊர். ஆனால் அப்போது ஹொய்சள மன்னர் வீர வல்லாளர் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் மாளிகை கட்டிக் கொண்டு அங்கே இருந்து வந்தார். ஆகவே இப்போது அவரைத் தேடிச் சென்ற குலசேகரனும், குறளனும் திருவண்ணாமலைக்கே சென்றனர். 
பற்பல காணிக்கைகளையும் எடுத்துக் கொண்டு ராஜாங்க அதிகாரிகளைச் சந்தித்து மன்னனைச் சந்திக்க அனுமதி பெற்றுப் பிரதான ராஜசபா மண்டபத்திற்குள் நுழைந்தனர் இருவரும்.

மந்திரி, பிரதானிகள், வித்துவான்கள் புடைசூழ சிங்காதனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் வீர வல்லாளர். அப்போது அங்கே ஓர் பெண்ணின் குரல் கம்பீரமாகக் கேட்டது. அந்தக் குரல் முதலில் வடமொழியில் ஏதோ ஸ்லோகம் போன்ற ஒன்றைச் சொல்லிவிட்டுப் பின்னர் தமிழில் அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது.  அதிர்ச்சி அடைந்த குலசேகரன் அந்தப்பக்கம் பார்த்தால் அவன் நன்கு அறிந்த ஹேமலேகா! அங்கே ரகுவம்சத்தின் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறிவிட்டு அதன் பொருளைத் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தாள். 

No comments: